பாஜக vs ஆம் ஆத்மி... இப்படித்தான் இருக்கப் போகிறது கடைசி நேர சண்டை!
டெல்லி: டெல்லி சட்டசபைத் தேர்தல் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. டெல்லியின் மூலை முடுக்கெல்லாம் ஆதரவு திரட்ட பாஜக தலைவர் அமீத் ஷா 125 பேரை களம் இறக்குகிறார்.
மறுபக்கம் ஆம் ஆத்மியும் விடாக் கொண்டன் கொடாக் கண்டனாக களத்தில் இறங்கியுள்ளது. அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள் குழுவே களம் குதித்துள்ளது. பாஜகவுக்கு சரியான போட்டியாக அதுவும் முண்டாசு கட்டிக் கொண்டு குதித்துள்ளது.
இரு தரப்பிலிருந்தும் வார்த்தைப் போர்கள் வெடித்துத் தெறித்துக் கொண்டிருக்கின்றன. பாஜக செய்யும் ஒவ்வொரு தப்பையும் தேடிப் பிடித்து அதை தனக்கு சாதகமாக்க ஆம் ஆத்மி முயன்று வருகிறது.
பாஜகவின் திட்டம் என்ன?
டெல்லி பிரசாரத்தில், கடைசி வாரத்தில் தனது பிரசாரத்தை அனலாக்க பாஜக திட்டமிட்டுள்ளது. நரேந்திர மோடியின் இமேஜை டெல்லி முழுக்க கடைசி நேரத்தில் வியாபித்து நிற்க வைக்கும் வகையில் பாஜகவினரின் பிரசாரத் திட்டத்தை வகுத்துள்ளார் அமீத் ஷா.
தலைவர்கள் குழு
தர்மேந்திர பிரதான், நிர்மலா சீதாராமன், அனந்தகுமார், அருண் ஜேட்லி ஆகியோரை அழைத்து அமீத் ஷா போட்டுள்ள கூட்டம் இந்த கடைசிக் கட்ட பிரசாரத் திட்டம் குறித்து ஆலோசித்துள்ளது.
மோடியின் இமேஜ் முக்கியம்
நரேந்திர மோடியின் இமேஜை எந்த அளவுக்கு திறம்பட பயன்படுத்த முடியும் என்பது குறித்து அவர்கள் விவாதித்துள்ளனர். சமீபத்திய தேர்தல்களில் கிடைத்த வெற்றியை அடிப்படையாக வைத்தும் திட்டமிடப்பட்டுள்ளது.
கிரண் பேடியும் முக்கியம்
கிரண் பேடி ஒரு முக்கியப் புள்ளி என்பதை பாஜக உணர்ந்துள்ளது. அதேசமயம், அவருக்கு எதிராக ஆம் ஆத்மியினர் கச்சை கட்டி கிளம்பியுள்ளனர். மேலும் அவருக்கு எதிராக சில பிரச்சினைகளும் கிளப்ப்பட்டுள்ளன. அதேசமயம், மோடியின் முகத்தை முன்னிறுத்தினால் இதுபோன்ற பிரச்சினை எழ வாய்ப்பில்லை என்பது பாஜகவினரின் நம்பிக்கை.
கட்சிக்குள் கலாட்டா
மேலும் கிரண் பேடியின் பெயரை முதல்வர் வேட்பாளராக அறிவித்தது கட்சிக்குள்ளேயே சிலருக்குப் பிடிக்கவில்லை என்பதையும் பாஜக தலைமை உணர்ந்துள்ளது. அந்தத் தலைவர்கள் பிரசாரத்தில் 100 சதவீத உழைப்பைக் கொடுக்காமல் உள்ளனராம்.
வீட்டுக்கு வீடு
பாஜகவின் கடைசிக் கட்டப் பிரசாரத்தில் வீட்டுக்கு வீடு நேரடியாக சென்று வாக்காளர்களைச் சந்திக்கும் திட்டம முக்கியமாக உள்ளது. கட்சியினர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். டெல்லி மக்களின் முக்கியப் பிரச்சினையான மின்சார விநியோகத்தை பாஜக எப்படி சரி செய்யும் என்பது குறித்தும் விளக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஒற்றுமை அவசியம்
கட்சியினர் பூசல்களை மறந்து ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் என்று அமீத் ஷா கண்டிப்பு கலந்த குரலில் ஏற்கனவே கூறியுள்ளார். கட்சிக்குள் ஒற்றுமை இருக்க வேண்டியது அவசியம் என்றும் ஷா வலியுறுத்தியுள்ளதாக பாஜக தலைவர்கள் ஒன்இந்தியாவிடம் தெரிவித்தனர்.
ஆம் ஆத்மி என்ன செய்யும்?
மறுபக்கம் டிவி மற்றும் சோஷியல் மீடியா மூலம் டெல்லி வாக்காளர்களை ஈசியாக அணுக முடியும் என்று ஆம் ஆத்மி கருதுகிறது. தனது கட்சியின் சிறந்த 25 பேச்சாளர்களைக் கொண்டு பாஜகவுடன் வார்த்தைப் போரில் மல்லுக்கட்டி வருகிறது அது. சாலை மார்க்கமான பிரசாரத்தையும் ஆம் ஆத்மி தீவிரப்படுத்தி வருகிறது.
பேடியால் பலன் கிடைக்காது
கிரண் பேடியால் பாஜகவுக்குப் பலன் கிடைக்காது என்றும் ஆம் ஆத்மியினர் நினைக்கிறார்கள். மேலும் மோடியை வைத்து மட்டுமே பாஜகவினரால் ஆதரவு திரட்ட முடியும் என்றும் ஆம் ஆத்மி கருதுகிறது.
முக்கியப் பிரச்சினைகளில் கவனம்
மின்சாரம், குடிநீர் போன்ற முக்கியப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தவும் ஆம் ஆத்மி முடிவு செய்துள்ளது. தேர்தல் அறிக்கையை வெளியிடுவதில்லை என்ற பாஜகவின் முடிவை தங்களுக்குச் சாதகமாக்கவும் ஆம் ஆத்மி முடிவு செய்துள்ளது.