உங்களுக்கு ஜெய் ஶ்ரீராம்.. எங்களுக்கு ஜெய் மா காளி.. பாஜக கோஷத்துக்கு மமதா பதிலடி!
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் இந்துக்களின் வாக்குகளை அறுவடை செய்ய பாஜக முன்வைக்கும் ஜெய் ஶ்ரீராம் முழக்கத்துக்கு பதிலடியாக ஜெய் மா காளி என்கிற கோஷத்தை எழுப்புகிறது மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ்.
லோக்சபா தேர்தல் களத்தில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கக் கூடிய தலைவராக மமதா பானர்ஜி உருவெடுத்திருக்கிறார். தேர்தல் முடிவுகள் மே 23-ல் வெளியான உடனே மத்தியில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து புதிய அரசை அமைப்பதில் கங்கணம் கட்டிக் கொண்டு இருப்பவர் மமதா பானர்ஜி.
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை வீழ்த்த பாஜக பகீரத முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அம்மாநிலத்தில் தம்மை தக்க வைக்க போராடும் இடதுசாரிகள் மறைமுகமாக பாஜகவுடன் கை கோர்த்துள்ளனர். இடதுசாரிகளுக்கு 17-20% வாக்கு சதவீதம் கிடைத்தாலும் ஒரு தொகுதியில் கூட அக்கட்சி மேற்கு வங்கத்தில் வெல்ல முடியாது என கூறப்படுகிறது.
திருமாவளவன் திமுக அணியிலிருந்து விலகுவார் பாருங்க.. கடைசியில் பாமக பாலு சொல்வதுதான் நடக்க போகிறதோ
இஸ்லாமியர்கள் மமதாவுக்கு ஆதரவு
பாஜகவின் வாக்கு சதவீதம் இம்முறை 10% என்கிற அளவுக்குத்தான் இருக்கக் கூடும் என்கின்றனர் ஆய்வாளர்கள். மேற்கு வங்கத்தில் இஸ்லாமியர் வாக்குகள் அப்படியே மமதாவின் திரிணாமுல் காங்கிரஸுக்கு செல்வது உறுதி.
பாஜகவின் வியூகம்
இதனால் இந்துக்களின் வாக்குகளை குறிவைத்து பாஜக பிரசாரம் செய்து வருகிறது. மமதா பானர்ஜியை இஸ்லாமியர்களின் முகமாக உருவாக்கி இந்துக்களிடம் இருந்து தனிமைப்படுத்த பாஜக முயற்சிக்கிறது.
மமதாவின் ஜெய் மா காளி கோஷம்
ஆனால் மமதா பானர்ஜியோ பாஜகவின் இந்த சித்து வேலைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறார். பாஜகவினர் ஜெய் ஶ்ரீ ராம் என முழக்கம் எழுப்பினாலே சிறையில் தள்ளுகிறார் என கூறினார் பிரதமர் மோடி. இதற்கு பதிலடி தரும் வகையில் ஜெய் மா காளி என மேற்கு வங்காள தேசிய் இனத்தின் கடவுளை முன்வைத்து முழங்குகிறார். பாஜக தேசியவாதத்தை முன்வைக்க முயற்சிக்கிறது; மமதா பானர்ஜியோ மேற்கு வங்க தேசியவாதத்தை முன்வைத்து இந்துக்களின் வாக்குகளை தக்க வைக்க நினைக்கிறார்.
அன்று லாலு இன்று மமதா
1990களில் பீகாரில் பாஜக விஸ்வரூபம் எடுக்கும் நிலை வந்த போது ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் மதச்சார்பின்மையா? மதவாதமா? என்கிற கோஷத்தை முன்வைத்தார். கடந்த தேர்தலில் பீகார் தேசியவாதத்தை முன்வைத்து பிரசாரத்தை மேற்கொண்டார் லாலு. அதே பாணியில் பாஜகவுக்கு பதிலடியாக மேற்குவங்க தேசியவாதத்தை படுதீவிரமாக முன்னிலைப்படுத்துகிறார் மமதா. அண்மையில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய மமதா, நாடு இப்போது பாசிஸ்டுகள் அரசிடம் சிக்கி இருக்கிறது. மே 23-க்குப் பின்னர் டெல்லியை இந்த மேற்கு வங்கம் கைப்பற்றும். இந்த மேற்கு வங்கம் புதிய அரசாங்கத்தை மத்தியில் உருவாக்கியே தீரும் என ஆவேசத்துடன் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.