மும்பையில் குடியிருப்பு இடிந்த விபத்து : பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு 48 பேர் காயங்களுடன் மீட்பு
மும்பை: மும்பையில் வெள்ளிக்கிழமை காலை 4 மாடி குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உள்பட 25 பேர் உயிரிழந்தனர். 48 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
தெற்கு மும்பையில் மஷ்கான் என்ற இடத்தில் உள்ள இந்தக் கட்டடம் பிரிஹன் மும்பை மாநகராட்சிக்குச் சொந்தமானது. இதில் 21 குடும்பத்தினர் வாடகைக்கு வசித்து வந்தனர்.
30 ஆண்டு பழமையான இந்தக் கட்டடம் வெள்ளிக்கிழமை அதிகாலை 6 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. உடனடியாக தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உள்பட 25 பேர் உயிரிழந்தனர்.
விடிய விடிய மீட்புப்பணிகள் நடைபெற்றது. மீட்கப்பட்ட 48 பேர் ஜெஜெ மருத்துவமனை மற்றும் நாயர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 26 பேர் பலத்த காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டிருக்கக் கூடும் எனவும், அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த மும்பை தீயணைப்புப் படை அதிகாரி டி.எஸ். பாட்டீல் காயமடைந்தார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மாநில முதல்வர் பிரித்விராஜ் சவாண் மூத்த அதிகாரிகளுடன் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தி, மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
விபத்தில் உயிரிழந்தவர்கள் அனைவருக்கும் தலா 2லட்சம் ரூபாய் வழங்கப்படும் என மேயர் சுனில் பிரபு தெரிவித்தார். இது பழமையான கட்டடம்தான்ஆனால் முற்றிலும் பயன்படுத்த முடியாமல் போன கட்டடம் இல்லை என்று கூறினார். கட்டட ஒப்பந்ததாரர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
4 மாடிகள் கொண்ட இந்த கட்டடத்தில் மாநகராட்சியில் மார்க்கெட்துறையைச் சேர்ந்த ஊழியர்களுக்கானது. இந்த கட்டடம் லேசாக விரிசல் விடுவதையும், குலுங்குவதையும் கண்டு உடனடியாக வெளியேறிவர்கள் தப்பியுள்ளனர். காலை 6 மணியளவில் இடிந்த காரணத்தால் பெரும்பாலானவர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொள்ள நேரிட்டது.
மும்பை மாஹிம் பகுதியில் கடந்த ஜூன் மாதம் ஓர் அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்ததில் 10 பேர் பலியானார்கள். தானே பகுதியில் நடந்த விபத்தில் 70 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து 3-ஆவது பெரிய விபத்து இப்போது நிகழ்ந்துள்ளது.