மனைவியை கொன்று சூட்கேசில் அடைத்த பிபிஓ அதிகாரி கைது- விசாரணையில் திடுக் தகவல்கள்..
டெல்லி: கள்ளத்தொடர்பு பிரச்சினையால் மனைவியை கொலை செய்து சூட்கேசுக்குள் வைத்து வீசிய பிபிஓ ஊழியர் கைது செய்யப்பட்ட சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி காசியாபாத்திலுள்ள அருண் என்க்ளேவ் குடியிருப்பில் வசிப்பவர் ஓம் பிரகாஷ் (25). முன்னணி தொலைதொடர்பு நிறுவனம் ஒன்றில் பிபிஓ அதிகாரியாக வேலை பார்த்தார். இவருக்கும் நீத்து கவுர் (23) என்பவருக்கும் கடந்தாண்டு நவம்பரில் திருமணமானது. கருத்து வேறுபாடு காரணமாக இம்மாதம் 8ம்தேதி முதல் கல்யாம்பூரி பகுதியிலுள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு நீத்து வந்துவிட்டார்.
எதிர்பாராத ஆச்சரியம்..
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை ஓம் பிரகாஷ், தனது மனைவியை தொலைபேசியில் தொடர்புகொண்டு "உனக்கு ஒரு 'சர்ப்ரைஸ்' வைத்துள்ளேன். 'செக்டார்-18' மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வா, நாம் சந்திப்போம்" என்று அழைத்துள்ளார். மேலும், "இதை யாரிடமும் சொல்லிவிடாதே.." என்றும் கூறியுள்ளார். ஆனால் நீத்து தனது தாயிடம் இதுகுறித்து தெரிவித்துவிட்டு கணவன் அழைத்த இடத்துக்கு சென்றுள்ளார்.
கழுத்தை நெரித்து கொலை
தம்பதிகள் இருவரும் சந்தித்தபோது, ஓம்பிரகாஷ் மிகவும் மென்மையாக பேசி தன்னுடன் காரில் வருமாறு நீத்துவை அழைத்துள்ளார். நொய்டா லிங் ரோட்டை நோக்கி ஓம்பிரகாஷ் காரை செலுத்தியுள்ளார். அப்போது கணவன்-மனைவியிடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் காரை நிறுத்திய ஓம்பிரகாஷ், மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
சூட்கேசில் சடலம்
காரின் டிக்கியில் வைத்திருந்த சூட்கேசை எடுத்து வந்து அதற்குள் சடலத்தை வைத்து, 'மயூர் விகார் எக்டென்சன்' மெட்ரோ ரயில் நிலையம் அருகேயுள்ள ஒரு சாலையோர புதரில் சூட்கேசை வீசிச் சென்றுவிட்டார்.
கணவன் நாடகம்
இரவு சுமார் 9 மணியளவில், நீத்துவின் சகோதரருக்கு போன் செய்த ஓம்பிரகாஷ், நீத்துவை சந்திக்க விரும்பி தான் அழைத்திருந்ததாகவும், ஆனால் அவர் சொன்னபடி, மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வரவில்லை என்றும் தெரிவித்தார். இதனால் பதறிப்போன நீத்துவின் குடும்பத்தார், அவரது செல்போனுக்கு தொடர்புகொண்டனர். ஆனால் தொடர்புகொள்ளயியலவில்லை. இதையடுத்து நீத்துவை காணவில்லை என்று போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
சிசிடிவியில் அம்பலம்
இதனிடையே ஓம்பிரகாஷ் மீது சந்தேகப்பட்ட போலீசார், மனைவியை சந்திக்க ஓம்பிரகாஷ் அழைத்த, செக்டார்-18 மெட்ரோ ரயில் நிலையத்திலுள்ள, சிசிடிவி கண்காணிப்பு காமிராக்களில் பதிவான காட்சிகளை போட்டு பார்த்தனர். அப்போது, நீத்துவும், ஓம்பிரகாஷும் சந்தித்து கொண்ட காட்சி அதில் பதிவாகியிருந்ததை பார்த்தனர். ஓம்பிரகாஷ் பொய் சொல்லியிருந்தது அதில் இருந்து தெரியவந்தது.
ஓப்புதல்
இதையடுத்து ஓம்பிரகாஷை காவல் நிலையம் அழைத்து சென்ற போலீசார் 'தக்க' வகையில் விசாரித்தனர். அப்போது நடந்த சம்பவத்தை ஓம்பிரகாஷ் தெரிவித்தார். அவர் குறிப்பிட்ட இடத்துக்கு போலீசார் சென்று பார்த்தபோது சூட்கேசுக்குள் நீத்து கவுரின் சடலம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஓம்பிரகாஷ் கைது செய்யப்பட்டார்.
வாக்குமூலம்
போலீசாரிடம் ஓம்பிரகாஷ் அளித்த வாக்குமூலத்தில், "எனது மனைவி யாருடனாவது அடிக்கடி போனில் பேசிக்கொண்டிருப்பார். ஆபீசில் இருந்து அவருக்கு போன் செய்யும்போதெல்லாம், 'பிசி'யாக இருப்பதாக தொலைபேசி நெட்வொர்க்கில் இருந்து பதில் வரும். இதுகுறித்து நீத்துவிடம் கேட்டால், தனது குடும்பத்தாருடன் பேசிக்கொண்டிருந்ததாக கூறுவார். அவரது நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால்தான் கொலை செய்தேன்" என்று கூறியுள்ளார்.
கள்ளத்தொடர்பு..?
ஆனால் நீத்துவிடன் குடும்பத்தார் வேறுவிதமாக போலீசில் தெரிவித்துள்ளனர். ஓம்பிரகாஷுக்கும், அவருடன் வேலை பார்க்கும் பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. அவர்களின் செல்போன் எஸ்.எம்.எஸ் பரிமாற்றத்தை நீத்து பார்த்து விளக்கம் கேட்டதால்தான் அவரை தீர்த்துக்கட்ட ஓம்பிரகாஷ் முடிவு செய்தார் என்று தெரிவித்துள்ளனர்.