'அப்படி ஒரு' சிடி இருப்பதாக மோடிக்கு சந்தேகம்: சுப்ரீம் கோர்ட்டில் அதிகாரி பிரதீப் தகவல்
டெல்லி: குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் தம்மால் அறிமுகப்படுத்தப்பட்ட இளம்பெண்ணும் இருக்கக் கூடிய சிடி ஏதும் தம் வசம் இருக்குமோ என்ற சந்தேகத்தின் பேரிலேயே பல பொய் வழக்குகள் போடப்பட்டதாக குஜராத் ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரதீப் சர்மா உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்.
குஜராத் மாநிலத்தில் இளம்பெண் வேவு பார்க்கப்பட்ட விவகாரத்தில் முதல்வர் மோடி மீது சிபிஐ விசாரணை கோரி அம்மாநில ஐ.ஏ.எஸ் அதிகாரியான பிரதீப் சர்மா மனு ஒன்றை தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து அவரை விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.
பின்னர் உச்சநீதிமன்றத்தில் பிரதீப் சர்மா விரிவான பிரமாண பத்திரம் ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தாம் கட்ச் மாவட்டத்தில் ஆட்சியராக பணிபுரிந்த போது சோனி என்ற நபருடன் நட்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சோனியின் குடும்பத்தினர் நெருங்கிய நண்பர்களாயினர்.
இந்நிலையில் பெங்களூரில் படித்து வந்த சோனியின் மகளிடம் குஜராத் மாநில அரசின் திட்டங்களில் ஒன்று ஒப்படைக்கப்பட்டது. இத்திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தையின் போது 2004ம் ஆண்டு அப்பெண்ணை குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு நான் அறிமுகம் செய்துவைத்தேன்.
இந்நிலையில் அவர்கள் தொடர்பான சிடி ஒன்று தம்மிடம் இருப்பதாக மோடி சந்தேகித்தார். இதனாலேயே 2010-12ம் ஆண்டு காலத்தில் தம் மீது ஏராளமான வழக்குகள் போடப்பட்டு சஸ்பென்ட் செய்யப்பட்டேன்.
எனக்கு அந்த சிடி பற்றி எதுவும் தெரியவில்லை. ஆனால் அப்படி ஒரு சிடி வெளியானால் இத்தனை காலம் கட்டி உருவாக்கப்பட்ட தமது இமேஜ் பாதிக்கப்படும் என்று மோடி அச்சப்படுகிறார். இதனாலேயெ தம் மீது பொய் வழக்குகள் போடப்பட்டிருக்கின்றன. தாம் தண்டனைக்குள்ளாக்கப்பட்டிருக்கிறேன் என்று பிரதீப் சர்மா கூறியுள்ளார்.