மின்சார தட்டுப்பாட்டுக்கு தீர்வு! மாநிலங்களிடையே மின்தடம் அமைக்க ரூ.12,500 கோடியில் திட்டம்!!
டெல்லி: மாநிலங்கள் இடையே மின் வழித்தடத்தை வலுவாக்கும் வகையில், ரூ.12 ஆயிரத்து 500 கோடி மதிப்புள்ள 9 மின் திட்டங்களுக்கு மத்திய மின்துறை அமைச்சகம் இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து மத்திய மின்சாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழகம், ஹரியானா, சட்டீஸ்கர், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, தெலுங்கானா, உள்ளிட்ட மாநிலங்களுக்கு இந்த புதிய திட்டங்களால் பலன் கிடைக்கும். 2100 மெகாவாட் மின்சாரத்தை எடுத்து செல்லும் வகையில் 765 கே.வி. மின்கம்பிகள் அமைக்கவும், புதிதாக 765/400 கேவி துணை மின் நிலையங்கள் அமைக்கவும் இந்த திட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.
மத்திய மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து பிற பகுதிகளுக்கு மின்சாரத்தை எடுத்துச் செல்ல இந்த மின்கம்பிகளும், மின் நிலையங்களும் உதவிகரமாக இருக்கும். மத்திய அரசின் மின் உற்பத்தி நிலையங்கள் மட்டுமின்றி, தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்தும் மின்சாரம் எடுத்துச் செல்ல இதனால் முடியும்.
இந்த பணிகளுக்காக டெண்டர் விடப்படும். தனியார் முதலீட்டாளர்களும் டெண்டரில் பங்கேற்கலாம். அடுத்த மூன்றாண்டுகளில் மத்திய மின்தொகுப்பில் 28 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கூடுதலாக சேர்க்கப்படும். இதன் மூலம் மத்திய மொத்த மின்தொகுப்பின் கொள்ளளவு 66ஆயிரம் மெகாவாட்டாக 2017ம் ஆண்டுக்குள் உயரும். இத்திட்டங்கள், ஆரம்ப கட்டத்திலேயே, பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்தது. தற்போது அதை வேகப்படுத்தியுள்ளோம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக மேற்கொள்ளப்பட உள்ள 9 திட்டங்களில் நெய்வேலி அனல்மின் நிலையமும் இணைக்கப்பட்டுள்ளது. இங்கு ரூ.612 கோடி செலவில் மின்திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. 400 மெகாவாட்டுக்கான 'மின்பகிர்வு சிஸ்டம்' திட்டத்தை செயல்படுத்த இந்த தொகை செலவிடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மின்தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில், வட மாநிலங்களில் இருந்து மின்சாரத்தை பணம் கொடுத்து பெற்றுக்கொள்ள மாநில அரசு முயன்றது. ஆனால் வட இந்தியாவில் இருந்து தமிழகத்துக்கு மின்வழித்தடம் இல்லாததால் மின்சாரத்தை கொள்முதல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இப்பிரச்சினையை தீர்த்து மின் வழித்தடத்தை அமைக்குமாறு கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.