மத்திய அரசுக்கு திடீர் ஞானோதயம்... வைகோவிற்கு தடை விதித்ததற்கு மலேசியா தூதரை அழைத்து கண்டனம்!
மலேசிய நாட்டிற்குள் வைகோவை அனுமதிக்காததற்கு மலேசிய நாட்டு தூதரை அழைத்து மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
டெல்லி: கடந்த ஜீன் மாதத்தில் மலேசிய நாட்டிற்குள் செல்ல வைகோவிற்கு தடை விதிக்கப்பட்டதற்கு மலேசிய நாட்டு தூதரை அழைத்து மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜீன் மாதத்தில் பினாங்கு மாநில துணைமுதல்வர் ராமசாமி மகள் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வைகோ மலேசியாவிற்கு சென்றார். அப்போது ஆபத்தானவர் என்ற பெயர் பட்டியலில் வைகோவின் பெயர் இடம்பெற்றுள்ளதை சுட்டிக்காட்டி அந்த நாட்டு அரசு வைகோவை மலேசிய நாட்டிற்குள் அனுமதிக்கவில்லை.
விடுதலை புலிகள் அமைப்பை சார்ந்தவர் என்று கூறி வைகோவை மலேசியாவிற்குள் அனுமதிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்ததோடு, அவரது பாஸ்போர்ட்டையும் பறிமுதல் செய்து 8 மணி நேரம் வைகோவை விமான நிலையத்திற்குள்ளேயே அமர வைத்து வேறு விமானத்தில் சென்னை அனுப்பினர்.
வைகோவிற்கு நடந்த இந்த செயல் குறித்து அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்த போதும், மத்திய அரசு இது குறித்து அப்போது வாய் திறக்கவேயில்லை. இந்நிலையில் திடீரென மத்திய அரசு மலேசிய தூதரை அழைத்து வைகோவை மலேசியாவிற்குள் செல்ல தடை விதித்தற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
ஜுன் மாதத்தில் நடந்த சம்பவத்திற்கு டிசம்பர் மாதத்தில் மத்திய அரசு கண்டனம் தெரிவிப்பது என் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. ஒரு வேளை வைகோவை வைத்து திமுகவை தங்கள் பக்கம் இழுக்க பாஜக காய் நகர்த்துகிறதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.