தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது கட்டி முடிக்கப்படும்.. மத்திய அரசு பதில்
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது கட்டி முடிக்கப்படும் என்ற கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
டெல்லி: தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என்று மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
கடந்த 2015-ஆம் ஆண்டு பிப்ரவரி கடைசியில் நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்த பட்ஜெட்டில், தமிழகம், பஞ்சாப், ஹிமாச்சலப்பிரதேசம், அசாம், ஜம்மு-காஷ்மீர் ஆகிய 5 மாநிலங்களில் டெல்லியில் உள்ளது போன்று அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழக மருத்துவமனை (எய்ம்ஸ்) அமைக்கப்படும் என அறிவித்திருந்தார்.

நிலம் கையகப்படுத்தல்
எய்ம்ஸ் மருத்துவமனையை மத்திய அரசு அமைக்கத் தேர்வு செய்வதற்காக செங்கல்பட்டு, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டம் செங்கிபட்டு, ஈரோடு மாவட்டம் பெருந்துறை, மதுரை அருகே தோப்பூர் ஆகிய 5 இடங்களில் தமிழக அரசு நிலம் கையகப்படுத்தப்பட்டு தயாராக இருப்பதாகவும் இவற்றில் ஏதாவது ஒரு குறிப்பிட்ட இடத்தை மத்திய அரசு தேர்வு செய்து எய்ம்ஸ் மையத்தை அமைக்கலாம் என்று அப்போதைய முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசுக்கு கடிதம் மூலம் குறிப்பிட்டார்.

கோரிக்கை
இந்நிலையில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுக இரண்டானது போல் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே அமைப்பது என்பது குறித்து தகராறு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க வேண்டும் என்று எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் கோரிக்கை விடுத்தார்.

செப்டம்பருக்குள் எய்ம்ஸ்
தற்போது நடைபெறும் பட்ஜெட் கூட்டத் தொடரின்போது மக்களவையில் உறுப்பினர் ஒருவர் எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய அரசு கூறுகையில், 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும்.

இடங்கள் பரிசீலனை
எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தமிழக அரசு பரிந்துரைத்த இடங்கள் பரிசீலைனையில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால் இன்னும் எங்கு அமைப்பது என்பது குறித்து முடிவு செய்யப்படவில்லை என்றே தோன்றுகிறது.












Click it and Unblock the Notifications