மேகாலயாவில் காஸி இன மக்களுக்கு தனிநாடு கோரும் பிரிவினைவாத ஹெச்என்எல்சி குழுவுக்கு மீண்டும் தடை
டெல்லி: மேகாலயாவில் காஸி இன மக்களுக்கு தனிநாடு கோரும் பிரிவினைவாத ஆயுத குழுவான ஹெச்என்எல்சி (ஹின்னிவ்ட்ரெப் தேசிய விடுதலை கவுன்சில்) சட்டவிரோத இயக்கம் என பிரகடனம் செய்து மத்திய அரசு தடை செய்துள்ளது.
மேகாலயாவில் காஸி இன மக்களுக்கு தனிநாடு வேண்டும் என்பது ஹெச்என்எல்சியின் கோரிக்கை. வங்கதேச நாட்டில் முகாம்கள் அமைத்து இந்த ஆயுத குழு செயல்பட்டு வந்தது.
மேகலாயாவில் பல்வேறு சட்டவிரோத செயல்களில் இந்த குழு ஈடுபட்டு வருகிறது என்பது நீண்டகால குற்றச்சாட்டு. இதன் தலைவராக இருந்த ஜூலியஸ் டார்போங் 2007-ல் மத்திய அரசிடம் சரணடைந்தார்.
பின்னர் 2013-ல் மேகாலயா சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் சரணடைந்த போதே தமது இயக்கம் கலைக்கப்பட்டதாக அறிவித்தார்.
ஆனாலும் அந்த இயக்கத்தின் பெயரில் சிலர் இயங்கி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டு இந்திய குடியரசு நாளை துக்க நாளாக கடைபிடிக்கவும் இந்த குழு வலியுறுத்தி வந்தது.
கடந்த 2000-ம் ஆண்டு இந்த இயக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர் இத்தடை நீக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் ஹெச்என்எல்சி ஒரு சட்டவிரோத இயக்கம் என பிரகடனப்படுத்தப்பட்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.