சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு தண்டனை... போஸ்கோ சட்டத்தை திருத்துகிறது மத்திய அரசு
12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு தண்டனை விதிக்கும் வகையில் போஸ்கோ சட்டத்தை திருத்தம் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
டெல்லி: 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு தண்டனை விதிக்கும் வகையில் போஸ்கோ சட்டத்தை திருத்தம் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் கத்துவாவில் சிறுமி ஒருவரை 7 நாட்கள் வைத்து பலாத்காரம் செய்த கும்பல் அந்த குழந்தையை கொடூரமாக கொன்ற சம்பவம், சூரத்தில் அடையாளம் தெரியாத 9 வயது சிறுமி பலாத்காரம், உ.பி. உன்னவ் பகுதியில் 10 வயது சிறுமி பலாத்காரம் உள்ளிட்ட அண்மை சம்பவங்களுக்கு உச்சப்பட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்தது.
மத்திய அமைச்சர் மேனகா காந்தியும் பாஜக எம்பி ஹேமமாலினியும் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் இந்த சம்பவங்களில் குற்றவாளிகளுக்கு அதிகப்பட்ச தண்டனை என்ற பொதுநலன் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டது.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக மத்திய அரசு கூறுகையில் 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு தண்டனை என்ற வகை செய்யும் சட்டதிருத்தம் கொண்டு வரப்படவுள்ளது.
குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் மேற்கண்ட சட்டத்திருத்தம் நடவடிக்கை தொடங்கியுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.