30 பசுக்கள் உயிரிழக்க அரசே காரணம்... சட்டீஸ்கர் பாஜக பிரமுகர் குற்றச்சாட்டு
சட்டீஸ்கர் மாநிலத்தில் 30 பசுமாடுகள் உயிரிழக்கக் காரணமான பாஜக பிரமுகரை போலீசார் கைது செய்துள்ளனர். இது அம்மாநில பாஜகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநிலத்தில் 30 பசுமாடுகள் உயிரிழக்கக் காரணமான பாஜக பிரமுகரை போலீசார் கைது செய்துள்ளனர். இது அம்மாநில பாஜகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் பசுக்கள் உயிரிழக்க மாநில அரசே காரணம் என்று கைதான பாஜக பிரமுகர் கூறியுள்ளார்.
சட்டீஸ்கர் துர்க் மாவட்டத்தில் உள்ள ராஜ்பூரில் ஹரீஷ் வர்மா என்ற பாஜக பிரமுகர், அரசு உதவி பெறும் கோசாலை ஒன்றை நடத்தி வருகிறார். ஹரீஷ் வர்மாவின் கோசாலையில் கடந்த சுதந்திரத் தினத்தன்று, 30 பசுக்கள் பரிதாபமாக உயிரிழந்தன.
இதற்குச் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததே காரணம் என பாஜக பிரமுகரான ஹரீஷ் வர்மா தெரிவித்தார். ஆனால், அவரின் கோசாலையில் அடுத்தடுத்து பசு மாடுகள் உயிரிழப்பை அறிந்த கால்நடைத்துறை மருத்துவர் அடங்கிய குழு ஒன்று, கோசாலைக்குச் சென்று சோதனையிட்டது.
அங்கு அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததாலும், பட்டினி போடப்பட்டதாலும், நோய் வந்த நிலையில் பசு மாடுகள் உயிரிழந்ததையும் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து, கோசாலையில் உள்ள 500க்கும் மேற்பட்ட பசுமாடுகளை வேறு கோசாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளதுடன், பாஜக பிரமுகர் ஹரீஷ் வர்மா மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரைக் கைதும் செய்துள்ளனர்.
மாநில அரசின் மானியம் இல்லை
இது குறித்த விசாரணையில், ஹரீஷ் வர்மா போலீசாரிடம் " மாநில அரசு, கோசாலை பசுக்களை பராமரிக்க ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் மானியம் வழங்கவில்லை. இதனால் பசுக்களுக்கான உணவை வாங்க முடியவில்லை. அதனால் பசுக்கள் உயிரிழப்பிற்கு மாநில அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
சிறிய இடத்தில் பசுக்கள் அடைப்பு
ஆனால் உண்மையில் பாஜக பிரமுகர் 220 பசுக்கள் இருக்க வேண்டிய கோசாலையில், 600 பசுக்களை அடைத்து வைத்துள்ளார். இதனால் பராமரிப்புகள் இன்றி பட்டினியால் பசுக்கள் இறந்தன என்று கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
பசுவதையை எதிர்க்கும் பாஜக
அண்மைக்காலமாக, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு பசுவதைக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாடு முழுவதும் இறைச்சிக்காகப் பசுக்களை விற்கக் கூடாது என்றும், அப்படி விற்பது தண்டனைக்குரியது என்றும் கூறி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
பாஜக தலைவர் கோசாலையில் பசுக்கள் மரணம்
இது நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பலைகளை எழுப்பியதால் இப்போது அதில் மத்திய அரசு கொஞ்சம் அடக்கி வாசிப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் பாஜக தலைவர் கோசாலையில் பராமரிப்பின்றி பசுக்கள் பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.