”ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல்?”- தலைமை தேர்தல் அதிகாரி வி.எஸ்.சம்பத் பதில்!
டெல்லி: ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத் தெரிவித்துள்ளார்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து அவரது சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை தாற்காலிகமாக நிறுத்தி வைத்து கடந்த 17 ஆம் தேதி உத்தரவிட்டது.

மேலும், வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்ய அவகாசம் அளித்து நால்வரையும் ஜாமீனில் விடுதலை செய்தது.
இந்த நிலையில், தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜெயலலிதா வெற்றி பெற்ற ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது என்ற கேள்விக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத், "இந்த விஷயத்தை தேர்தல் ஆணையம் கவனத்தில் கொண்டுள்ளது. பொதுவாக ஒரு சட்டப்பேரவைத் தொகுதி காலியாகும் அறிவிப்பு அரசிதழில் வெளியானவுடன் அத்தொகுதிக்கு ஆறு மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு அவகாசம் உள்ளது.
அவசரகதியில் உடனடியாக தேர்தல் நடத்திவிட முடியாது. எனவே, முறைப்படி இந்த விவகாரத்தில் அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து உரிய நேரத்தில் இடைத்தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications