இந்திய சீன எல்லையில் போர் மேகம்... இரு நாடுகளும் ராணுவ வீரர்களை குவித்துள்ளதால் பதற்றம் அதிகரிப்பு
இந்திய சீன எல்லையில் இருநாட்டு ராணுவமும் தலா 3000 வீரர்களை குவித்துள்ளதால் போர்ப் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
டெல்லி: இந்தியா, சீனா இடையே ஏற்பட்டுள்ள எல்லை பிரச்னை காரணமாக, இருநாட்டு ராணுவங்களும், தலா 3000 வீரர்களை தங்களது எல்லைகளில் நிறுத்திவைத்துள்ளன. இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது.
சிக்கிம், பூடான், திபெத் ஆகிய 3 பகுதிகளையும் இணைக்கும் தோகா லா சந்திப்பு யாருக்குச் சொந்தம் என்பதில், இந்தியா, சீனா இடையே நீண்டகாலமாக பிரச்சனை நிலவி வருகிறது. இப்போது இரு நாடுகளுமே அந்த பகுதிக்கு உரிமை கொண்டாடி வருவதால், அங்கே பதற்றம் உருவாகியுள்ளது.
தங்களது கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இருநாட்டு ராணுவங்களும் தேசியக் கொடி ஏற்றி, பலத்த கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன. அதேசமயம், சீன ராணுவம், 3000 வீரர்களை அப்பகுதியில் நிலைநிறுத்தியுள்ளதாக, தெரியவந்துள்ளது.
இந்திய ராணுவமும் உடனடியாக 3000 வீரர்களை நிறுத்தி, பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. இரு தரப்பு வீரர்களும் மிக அருகாமையில் நேருக்கு நேராக நடமாடி வருகின்றனர் என்பதால் பதற்றம் நீடிக்கிறது.
இந்நிலையில் சர்ச்சைக்குரிய இடத்தை, இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத், நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். அதன் அருகே உள்ள காங்கடாக், கலிம்போங் இடங்களில் அமைந்துள்ள இந்திய ராணுவ முகாம்களையும் ராவத் ஆய்வு மேற்கொண்டார்.
குறிப்பிட்ட இடத்தில் இருந்து பின்வாங்க இருதரப்புமே மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், அடுத்து என்ன நடக்கும் என்ற பரபரப்பும் தொற்றிக் கொண்டுள்ளதாக, ராணுவ வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
சர்ச்சைக்குரிய இடத்தின் வழியாக, சீன ராணுவம், தங்களது எல்லைப் பாதுகாப்பு முகாமுக்கு, சாலை அமைக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளது. இதனை நிறுத்தச் சொல்லி, பூடான் அரசு வலியுறுத்திய போதும், சீனா அதனை கண்டுகொள்ளவில்லை. மேலும், அந்த இடத்தை உரிமை கொண்டாடுவதால், இந்திய ராணுவம் தீவிர கவனத்துடன் இந்த விவகாரத்தைக் கையாள தொடங்கியுள்ளதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.