இந்தியாவின் பிரமோஸ் ஏவுகணை தொழில்நுட்பத்தை சீனாவுக்கு கொடுத்ததா ரஷ்யா?
டெல்லி: இந்தியாவின் பிரமோஸ் ஏவுகணையில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்படங்களை சீனாவுக்கு ரஷ்யா கொடுத்திருப்பதாக கூறப்படுவதை விஞ்ஞானி சிவதாணுப்பிள்ளை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இந்தியாவின் பிரமோஸ் ஏவுகணை 2001ஆம் ஆண்டு முதல் பலமுறை சோதிக்கப்பட்டு வருகிறது. இது 290 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இலக்கைத் தாக்கக் கூடியது.
இதேபோல் சீனாவும் சாவோசன் -1 (சி.எக்ஸ்.-1) என்ற ஏவுகணையை அண்மையில் உருவாக்கியுள்ளது. இந்த ஏவுகணையானது இந்தியாவின் பிரமோஸ் ஏவுகணையின் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டது என்று செய்திகள் வெளியாகி இருந்தன.
இது குறித்து இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்தில் தலைமை விஞ்ஞானியாக பணியாற்றியவரும் பிரமோஸ் ஏவுகணையை உருவாக்கியவருமான சிவதாணுப் பிள்ளை கூறியதாவது:
சீனாவின் சி.எக்ஸ்-1 என்ற தொழில்நுட்பமும் நாம் பிரமோஸ் ஏவுகணையில் பயன்படுத்திய தொழில்நுட்பமும் வெவ்வேறானவை.
பிரமோஸ் ஏவுகணையானது இந்தியா-ரஷ்யா கூட்டுத் தயாரிப்பில் உருவானது. வெளித்தோற்றத்தில் மட்டும் பிரமோஸ் ஏவுகணையைப் போல் சீனாவின் ஏவுகணை இருக்கிறது. ஆனால் உள்ளே இருக்கும் என்ஜின் உள்ளிட்ட இதர பாகங்கள் அனைத்தும் வெவ்வேறானவை.
சீனாவின் ஏவுகணைக்கும் நமது பிரமோஸ் ஏவுகணைக்கும் எந்த தொடர்பும் இல்லை. பிரமோஸ் ஏவுகணை தொழில்நுட்பத்தை சீனாவுக்கு ரஷ்யா கொடுத்திருக்கலாம் என்பது சரியானது அல்ல.
இவ்வாறு சிவதாணுப் பிள்ளை கூறினார்.