கிறிஸ்தவ பள்ளி மீது தாக்குதல்- கடும் நடவடிக்கை எடுக்க டெல்லி கமிஷனருக்கு மோடி நேரடி உத்தரவு!
டெல்லி: டெல்லியில் கிறிஸ்தவ பள்ளிக்கூடம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டெல்லி போலீஸ் கமிஷனர் பாசியை நேரில் வரவழைத்து பிரதமர் மோடி உத்தரவிட்டார்.
டெல்லியில் அண்மைக்காலமாக கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி வந்தனர். இந்நிலையில் வசந்த் விஹார் பகுதியில் கிறிஸ்தவ பள்ளிக்கூடம் ஒன்றின் மீது நேற்று இரவு மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து அப்பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் பள்ளிக்கூடத்தை மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி இன்று பார்வையிட்டார்.
டெல்லி முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் அரவிந்த் கேஜ்ரிவாலும் இச்சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தேவாலயங்கள் மற்றும் பள்ளிக்கூடம் மீதான தாக்குதலில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பதை விளக்குமாறு டெல்லி போலீஸ் கமிஷனர் பாசிக்கு பிரதமர் நரேந்திர மோடி சம்மன் அனுப்பினார்.
இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடியை நேரில் சந்தித்தார் டெல்லி கமிஷனர் பாசி. இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பள்ளிக்கூடத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை வேண்டும் என்று பிரதமர் உத்தரவிட்டுள்ளதாக கூறினார்.