காங்.கை உதறுகிறார் மாஜி ரயில்வே அமைச்சர் ஜாபர் ஷெரீப்.. கெளடா கட்சியில் இணைகிறார்
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சருமான சி.கே.ஜாபர் ஷெரீப் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலக திட்டமிட்டுள்ளார். முன்னாள் பிரதமர் தேவெ கெளடாவின் மதச்சார்பற்ற ஜனதாதளத்தில் இணைய அவர் முடிவு செய்துள்ளார்.
ஜாபர் ஷெரீப் காங்கிரஸை உதறவுள்ளதாக வெளியாகியுள்ள செய்தியால் கர்நாடக காங்கிரஸ் வட்டாரம் அதிர்ச்சி அடைந்துள்ளது. பெங்களூர் மத்திய தொகுதியில் போட்டியிட அவர் சீட் கேட்டிருந்தார். ஆனால் காங்கிரஸ் மேலிடம் டிக்கெட் தரவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அவர் தற்போது தேவெ கெளடாவின் மதச்சார்பற்ற ஜனதாதளத்தில் சேர முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
கெளடாவும், ஷெரீப்பும் நீண்ட காலமாகவே நெருங்கிய நண்பர்கள். தற்போது கெளடா கட்சி சார்பில் மைசூர் தொகுதியில் ஷெரீப் போட்டியிடுவார் என்று தெரிகிறது.
இதுதொடர்பாக நேற்று கெளடாவைச் சந்தித்துப் பேசினார் ஷெரீப். கடந்த காலத்திலும் பலமுறை காங்கிரஸிலிருந்து விலகுவதாக அறிவித்தவர்தான் ஷெரீப். இருப்பினும் காங்கிரஸ் மேலிடம் அவரை எப்படியாவது சமாதானப்படுத்தி விடும். ஆனால் இந்த முறை விலகல் முடிவில் ஷெரீப் உறுதியாக உள்ளாராம்.
கடந்த 2004 மற்றும் 2009 தேர்தல்களில் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவியிருந்தார் ஷெரீப் என்பது குறிப்பிடத்தக்கது.
மைசூர் தொகுதியில் பாஜக சார்பில் பிரதாப் சிம்ஹா போட்டியிடுகிறார். காங்கிரஸ் சார்பில் தற்போதைய எம்.பியான விஸ்வநாத்தே நிற்கிறார். இவர்களை எதிர்த்து ஷெரீப்பை நிறுத்துகிறது மதச்சார்பற்ற ஜனதாதளம்.
இதுதொடர்பான அறிவிப்பை மார்ச் 21ம் தேதி கெளடா வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தனது விலகல் முடிவு குறித்து ஷெரீப் கூறுகையில், நானாக விலகவில்லை. காங்கிரஸ் கட்சிதான் என்னைத் தூக்கிப் போட்டு விட்டது. என்னுடன் சித்தராமையா பேசினார். ஆனால் என்னை சமாதானப்படுத்துவதில் என்ன பயன் உள்ளது. 2014 தேர்தலில் என்னைக் காங்கிரஸ் கைவிட்டு விட்டது அவ்வளவுதான் என்றார் ஷெரீப்.
கெளடா கூறுகையில், தனது முடிவிலிருந்து பின்வாங்கப் போவதில்லை என்று ஷெரீப் என்னிடம் கூறினார். மறுபரிசீலனைக்கான அவகாசம் தாண்டிப் போய் விட்டதாகவும், மெக்கா போய் விட்டுத் திரும்பிய பின்னர் உங்களுடன் இணைகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார். மனசாட்சிப்படி அவர் நடக்கிறார். மனசாட்சி சொல்வதைத்தான் அவர் கேட்பார் என்றார்.
முன்னதாக பெங்களூர் மத்திய தொகுதிக்கு ராகுல் காந்தியின் ஆதரவாளரான ரிஸ்வான் அர்ஷத்தை காங்கிரஸ் கட்சி வேட்பாளராக அறிவித்தது. இதனால் ஷெரீிப் கடும் அதிருப்தி அடைந்தார்.
இதையடுத்து அர்ஷத், ஷெரீப் வீட்டுக்கு விரைந்து சென்று அவருடன் பேசினார். அப்போது அவரிடம் ஷெரீப் கூறுகையில், எனக்கு உங்கள் மீது தனிப்பட்ட முறையில் எந்தக் கோபமும் இல்லை. ஆனால் என்னைக் காங்கிரஸ் நடத்திய விதம் எனக்குப் பிடிக்கவில்லை என்றார் ஷெரீப்.
காங்கிரஸுடனா்ன தனது உறவு குறித்து ஷெரீப் மேலும் கூறுகையில், நேரு பிரதமராக இருந்தபோது நான் இளைஞன்.லால் பகதூர் சாஸ்திரியுடன் அமர்ந்துள்ளேன். எனது வயதையும், காங்கிரஸுடனான எனது உறவையும் இப்போது நினைத்துப் பாருங்கள். ஆனால் அப்படிப்பட்ட எனக்கே ஒரு சீட் வாங்க கடுமையான போராட்டம் நடத்த வேண்டும் என்றால் எப்படி.. என்றார் கோபத்துடன் ஷெரீப்.