நட்டா கோட்டையில் “பவர்” போன பாஜக.. இமாச்சல் முதல்வராகும் காங்கிரஸ்காரர்! யார் இந்த சுக்விந்தர் சிங்?
சிம்லா: இமாச்சல பிரதேச மாநிலத்தில் பாஜகவை வீழ்த்தி மீண்டும் ஆட்சியை பிடித்து இருக்கும் காங்கிரஸ் கட்சி, சுக்விந்தர் சிங் சுஹுவை முதலமைச்சராக அறிவித்து இருக்கிறது. யார் இந்த சுக்விந்தர் சிங்? விரிவாக பார்ப்போம்.
நாடு முழுவதும் வலுவான கட்சியாக உருவெடுத்து அசைக்க முடியாத சக்தி என பேசப்பட்டு வந்த பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்து வந்த இமாச்சல பிரதேசத்தில் அதனை வீழ்த்தி காங்கிரஸ் வெற்றிபெற்று இருப்பது அக்கட்சிக்கு புத்துணர்ச்சியை கொடுத்து இருக்கிறது.
பாஜகவை அசைத்துப் பார்த்த தேர்தல் முடிவை தொடர்ந்து, இமாச்சல பிரதேச முதலமைச்சராக காங்கிரஸ் யாரை தேர்வு செய்யப்போகிறது என்ற கேள்வி எழுந்தது. இதில் சிலரது பெயர்கள் கூறப்பட்டதால் பலரும் சுக்விந்தர் சிங் என்ற பெயரையே கூறி வந்தனர்.

முதலமைச்சர் சுக்விந்தர் சிங்
அவர்களின் கூற்றின்படியே சுக்விந்தர் சிங்கை இமாச்சல பிரதேச முதலமைச்சராக அறிவித்து உள்ளது காங்கிரஸ் தலைமை. துணை முதலமைச்சராக முகேஷ் அக்னிஹோத்ரி அறிவிக்கப்பட்டு இருக்கிறார். இருவரும் நாளை காலை 11 மணியளவில் முதலமைச்சராகவும், துணை முதலமைச்சராகவும் பதவியேற்க இருக்கிறார்கள்.

யார் இந்த சிக்விந்தர் சிங்?
இமாச்சல பிரதேச மாநிலம் ஹமிர்பூர் மாவட்டம் நதான் தொகுதியில் 4 முறை சட்டசபை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் சுக்விந்த சிங் சுகு. சிம்லாவில் உள்ள இமாச்சல பிரதேச பல்கலைக்கழகத்தில் படித்த இவர், 1980 களில் காங்கிரஸ் இளைஞரணியில் சேர்ந்து பணியாற்றி தீவிரமான செயல்பாடுகளால் தேசிய தலைமையின் கவனத்தை ஈர்த்தவர்.

இளைஞரணி பதவி
வழக்கறிஞரான சுக்வீந்தர் சிங் 90களின் பிற்பகுதியில் தீவிர, முழுநேர அரசியலில் இறங்கினார். கடந்த 2000 மாவது ஆண்டில் காங்கிரஸ் இளைஞரணி மாநிலத் தலைவராக அவர் தேர்வு செய்யப்பட்டார். வேறு மாவட்டத்தை சேர்ந்தவராக இருந்தாலும், தலைநகர் சிம்லாவில் மாநகராட்சித் தேர்தலில் 2 முறை வெற்றிபெற்றார். கடந்த 2008 ஆம் ஆண்டு ஆண்டு மாநில காங்கிரஸ் செயலாளராக அவர் தேர்வானார்.

மாநில தலைவர்
இதன் மூலமாக காங்கிரஸ் மாநில தலைமைக்கு சென்ற அவர், படிப்படியாக மாநில காங்கிரஸ் நிர்வாகத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு காங்கிரஸ் மாநிலத் தலைவராக அவர் தேர்வு செய்யப்பட்டார். காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு நெருக்கமானவர் என்று அறியப்படும் சுக்விந்தர் சிங், அண்மையில் காலமான காங்கிரஸ் மூத்த தலைவரும் இமாச்சல் மூத்த தலைவருமான வீரபத்ர சிங்குடன் மோதல் போக்கை கடைபிடித்தார் என்று கூறப்படுகிறது.

வீரபத்ர சிங்குடன் மோதல்
வீரபத்ர சிங்கின் மனைவியும், மாநில காங்கிரஸ் தலைவருமான பிரதீபா சிங்கும் இமாச்சல பிரதேச முதலமைச்சர் பதவிக்கு குறிவைத்ததாக கூறப்படுகிறது. அதேபோல் துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட்ட 5 முறை காங்கிரஸ் எம்.எல்.ஏவான முகேஷ் அக்னிஹோத்ரியும் முதலமைச்சராக விரும்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாழ்த்து
ஹிமாச்சல பிரதேச முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட சுக்விந்தர் சிங், சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்து உள்ளார். அதேபோல் காங்கிரஸ் மூத்த தலைவரான ஆனந்த் சர்மாவும் சுக்விந்தர் சிங்கிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார். காங்கிரஸ் தலைமை ஜனநாயகத்தின்படி சரியான முடிவை எடுத்துள்ளதாக அவர் பாராட்டி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications