மோடி, ராகுலுக்கு என்னா வித்தியாசம் தெரியுமா?... பாஜக அமைச்சரின் கொச்சை பேச்சால் சர்ச்சை!
பிரதமர் நரேந்திர மோடிக்கும், ராகுல்காந்திக்குமான வித்தியாசம் என்ன என்று பாஜக அமைச்சர் பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஷிவ்புரி: பிரதமர் நரேந்திர மோடிக்கும், ராகுல் காந்திக்கும் தாடியில் உள்ள முடிக்கும், வாலில் உள்ள முடிக்குமான வித்தியாசம் போன்ற வேறுபாடுகள் இருப்பதாக பாஜக அமைச்சர் பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் ஷிவ்புரியில் பாஜக பொதுக்கூட்டத்தில் மத்திய இணை அமைச்சரும் பாஜக மூத்தத் தலைவருமான நரேந்திர சிங் தோமர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தியை விமர்சித்து பேசியுள்ளார். விரைவில் அந்த மாநிலத்தின் கோளாரஸ் சட்டசபைக்கு இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி இந்த பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கூட்டத்தில் பேசிய நரேந்திர சிங் தோமர் " பிரதமர் நரேந்திர மோடிக்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கும் ஒரு நல்ல வித்தியாசம் இருக்கிறது. அது என்ன வித்தியாசம் என்றால் தாடியில் இருக்கும் முடிக்கும், வாலில் இருக்கும் முடிக்கும் இருக்கும் வித்தியாசம் போன்ற வேறுபாடு இருப்பதாக" அவர் கூறினார்.
ராகுலால் மோடியாக முடியாது
மத்திய இணைஅமைச்சரின் இந்த சர்ச்சை பேச்சு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து பேசிய தோமர் பிரதமர் நரேந்திர மோடி போன்ற சிறந்த தலைவராக காங்கிரஸ் தலைவருக்கு இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும். மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு 2014ம் ஆண்டு முதல் காங்கிரஸ் சறுக்கலையே சந்தித்து வருவதாகவும் அவர் கூறி இருக்கிறார்.
மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்
தோமரின் இந்த சர்ச்சை பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் மல்லிகார்ஜூனகார்கே கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளார். நரேந்திர சிங் தோமர் தன்னுடைய இந்த பேச்சுக்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பிரதமர் ஏன் மவுனமாக இருக்கிறார்?
மூத்தத் தலைவர் அதிலும் நாடாளுமன்றத்தில் பேசுவகர் ஏன் இது போன்று மோசமான பேச்சுகளை பேசுகிறார் என்பதை புரித்து கொள்ளவே முடியவில்லை என்று மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். இது அவர்கள் மீதான நம்பிக்கையைத் தான் குறைக்கும், தமது கட்சி அமைச்சர்களின் இது போன்ற விமர்சனங்களைப் பார்த்து பிரதமர் ஏன் மவுனமாக இருக்கிறார் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ம.பி எம்பி நரேந்திர சிங் தோமர்
பாஜக கடந்த 15 ஆண்டுகளாக மத்திய பிரதேசத்தில் ஆட்சியில் இருக்கிறது. இந்த மாநிலத்திற்கு 2018 இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ராகுல்காந்தியை தாக்கி மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் எம்பி நரேந்திர சிங் தோமர் இப்படி ஒரு விமர்சனத்தை முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.