தமிழக காங். கொடுத்த வேட்பாளர் பட்டியல் நிராகரிப்பு... நிறைய இளசுகளைச் சேர்க்க உத்தரவு!
டெல்லி: தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் கொடுக்கப்பட்ட வேட்பாளர் பரிந்துரைப் பட்டியலை நிராகரித்து விட்டதாம் கட்சி மேலிடம். பழைய முகங்களையே நிறைய போட்டிருப்பதை மாற்றி இளையவர்களை நிறைய சேர்த்துக் கொடுக்குமாறு மேலிடம் அறிவுறுத்தியுள்ளதாம். இதையடுத்து அவசரம் அவசரமாக பட்டியலைத் திருத்தி அதை கட்சி மேலிடத்திடம் கொடுத்திருக்கிறார் தற்போது டெல்லியில் முகாமிட்டுள்ள மாநில தலைவர் ஞானதேசிகன்.
கடந்த வாரம்தான் தனது வேட்பாளர் பரிந்துரைப் பட்டியலை மாநில்நிர்வாகம், காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழுவிடம் கொடுத்திருந்தது. அதைப் பரிசீலித்துப் பார்த்த தேர்தல் குழு, எல்லாம் பழைய முகங்களாக இருக்கிறதே, நிறைய புதுமுகங்களை, இளைஞர்களைச் சேருங்கள் என்று கூறி பட்டியலைத் திருப்பிக் கொடுத்து விட்டதாம்.
இதையடுத்து பட்டியலை ஞானதேசிகன் தலைையிலான தமிழக குழு திருத்தியுள்ளது. திருத்தப்பட்ட பட்டியல் நேற்று மாலை தேர்தல் குழுவிடம் திருப்பிக் கொடுக்கப்பட்டது.
ராகுல் ஆலோசனைப்படி
ராகுல் காந்தியின் ஆலோசனைப்படிதான் பட்டியலைத் திருத்துமாறு கூறியதாம் தேர்தல் குழு என்று கூறுகிறார்கள். தேர்தல் அனுபவம் சற்று உள்ள இளைஞர்கள், நல்ல திறமையாக செயல்படக் கூடியவர்களை அதிக அளவில் வேட்பாளர்களாக நியமிக்க வேண்டும் என்பது ராகுல் காந்தியின் உத்தரவாம்.
40 சதவீதம் இளைஞர்கள்தான்
மொத்த வேட்பாளர்களில் 35 முதல் 40 சதவீதம் பேர் இளைஞர்களாக இருக்க வேண்டும் என்றும், 35 முதல் 45 வயது உடையவர்களுக்கு அதிக அளவில் சீட் தர வேண்டும் என்றும் ராகுல் காந்தி கூறியுள்ளாராம்.
சேலத்தில் மோகன் குமாரமங்கலம்
இதற்கிடையே, முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாமங்கலத்தின் மகன் மோகன் குமாரமங்கலம், சேலம் தொகுதியில் நிறுத்தப்படுவார் என்று கூறப்படுகிறது.
அரக்கோணத்திற்கு
அதேபோல பாஜகவிலிருந்து காங்கிரஸுக்கு வந்த நாசே.ராமச்சந்திரனின் மகன் நாசே ராஜேஷ் அரக்கோணத்தில் நிறுத்தப்படுவார் என்று தெரிகிறது.
வேலூர் வேட்பாளர் யார்
முன்னாள் எம்.பி. ஜெயமோகனின் மகன் விஜய் இளஞ்செழியன் வேலூரில் போட்டியிடலாம் என்று தெரிகிறது.
ராகுல்ஜி இதையும் கேட்டுக்கோங்கோ
அதேசமயம் ராகுல் காந்தியிடம் இன்னொரு முக்கியத் தகவலையும் மூத்த தலைவர்கள் சிலர் கொண்டு சென்றுள்ளனராம். அதாவது கடந்த தமிழக சட்டசபைத் தேர்தலின்போது ராகுல் காந்தியின் நேரடித் தலையீட்டின் பேரில் 12 தொகுதிகளுக்கு இளைஞர்களையே வேட்பாளர்களாகப் போட்டோம். ஆனால் மற்றவர்களை விட இவர்கள் தான் மிக மோசமாக தோற்றார்கள் என்பதாம்...
ராகுல் பதில் என்ன என்பது தெரியவில்லை.