உ.பி. உள்பட 5 மாநில தேர்தல் முடிவுகள் இன்று வெளியீடு... ஆட்சியைப் பிடிக்குமா பாஜக?
5 மாநில தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிறதகோவா,உத்ரகாண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களிலும் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறவாய்ப்பு உள்ளதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.
டெல்லி: உத்தரபிரதேசம், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட், பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ளது. காலை 11 மணிக்குள் முன்னணி நிலவரம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தரப்பிரதேசம், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட், பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் கடந்த 2 மாதங்களாக பல கட்டங்களாக நடைபெற்றது. வாக்குப்பதிவு அனைத்தும் முடிவடைந்ததை தொடர்ந்து 5 மாநிலங்களிலும் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. அடுத்த சில நிமிடங்களில் முன்னணி நிலவரம் வெளியாகி விடும். வாக்கு எண்ணிக்கை தொடங்கிய 3 மணி நேரத்திற்குள் பெரும்பாலான தொகுதிகளின் முன்னணி நிலவரம் வெளியாகி விடும். பகல் 12 மணிக்குள் ஆட்சியைப் பிடிப்பது யார் என்பது தெரிந்துவிடும்.
உத்தரப்பிரதேச தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்பு (எக்ஸிட் போல்) நடத்தப்பட்டது. விஎம்ஆர் நிறுவனம் நடத்திய எக்ஸிட் போல் முடிவுகளை டைம்ஸ் நவ் தொலைக்காட்சி நேற்று முன்தினம் வெளியிட்டது.
இதில் ஆளும் சமாஜ்வாதி கட்சி ஆட்சியை பறிகொடுக்கிறதாம். பாஜக நினைத்தபடியே அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றுகிறதாம். ஆளும் சமாஜ்வாதி - காங்கிரஸ் கூட்டணிக்கு 110 முதல் 130 இடங்கள்தான் கிடைக்குமாம். பாஜகவுக்கு 190 முதல் 210 இடங்களும் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 57 முதல் 74 இடங்கள் வரை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவா,உத்ரகாண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களிலும் பாஜக அதிக இடங்கள் கைப்பற்ற வாய்ப்பு உள்ளதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் ஆம் ஆத்மி அதிக இடங்களைப் பெறும் என தெரிய வந்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் தொங்கு சட்டசபை உருவாகும் சூழல் உள்ளதாக கருத்துகணிப்பு முடிவுகள் தெரிவிக்கன்றன.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு இந்த 5 மாநில தேர்தல் முன்னோட்டமாக கருதப்படுவதால் யார் ஆட்சியைப் பிடிக்கப்போகிறார்கள் என்று அந்த மாநிலம் மட்டுமல்ல நாடே ஆவலோடு காத்திருக்கிறது. இது ராகுல்காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் முடிவாக இருக்கும். மக்கள் என்ன தீர்ப்பு அளித்திருக்கிறார்கள் என்பது இன்று பிற்பகலுக்குள் தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.