அரபிக் கடலில் ‘நானவுக்’ புயல்: வானியல் மையம் எச்சரிக்கை
டெல்லி: கிழக்கு மத்திய அரபிக் கடலில் நேற்று பிற்பகல் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவானதாகவும், இது வடக்கு, வட மேற்காக நகர்ந்து தீவிர காற்றழுத்தத் தாழ்வு நிலையாக மாறி, புயல் சின்னமாக உருவெடுத்து இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நானவுக் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் சின்னம், மும்பைக்கு 670 கிலோ மீட்டர் தொலைவில் மேற்கு தென்மேற்கு திசையில் மையம் கொண்டுள்ளதாகவும், அடுத்த 24 மணி நேரத்தில் இது தீவிரமான புயலாக மாறக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா, கர்நாடகாவில் மழை
நானவுக் புயல் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் மகாராஷ்ட்ரா, கர்நாடகா மற்றும் கேரளாவின் கடலோரப் பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தரைக்காற்று
மேலும், இதன் காரணமாக மணிக்கு 80 முதல் 100 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் தரைக் காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயலின் தாக்கம்
புயலின் தாக்கம் இன்றும், நாளையும் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ள இந்திய வானிலை மையம், அதிகபட்சமாக மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்திலும், நாளை மறுநாள் மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்திலும் தரைக் காற்று வீசக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
மேற்கு திசையில் நகரும் புயல்
அதன்பின் நானவுக் புயலின் தாக்கம் படிப்படியாகக் குறைந்து மேற்கு வட மேற்கு திசையில் ஓமன் நாட்டின் கடல் பகுதியை நோக்கி நகரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
குஜராத் கடற்கரையைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குள் செல்லவேண்டாம் என இந்திய வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது.