என்னுடைய ஆபீஸை இழுத்து மூடிட்டாங்களே.. புலம்பும் டெல்லி மகளிர்நல ஆணையர் ஸ்வாதி மாலிவால்
டெல்லி: தம்முடைய அலுவலகம் மூடப்பட்டு பெயர் பலகை அகற்றப்பட்டுவிட்டதாக பதவியில் டெல்லி மகளிர் நல ஆணையர் ஸ்வாதி மாலிவால் புலம்பியுள்ளார்.
டெல்லியில் முதல்வர் கேஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. யாருக்கு அதிக அதிகாரம் உள்ளது என்பது தொடர்பாக முதல்வர் கேஜ்ரிவாலுக்கும், கவர்னர் நஜீப் ஜங்குக்கும் இடையே கடந்த சில மாதங்களாக மோதல் நீடித்து வருகிறது.
பொதுவாக அதிகாரிகள் நியமன விவகாரத்தில் இந்த மோதல் தீவிரமாகி வருகிறது. டெல்லியில் உள்துறை செயலாளரை நீக்கம் செய்த முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் உத்தரவை மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் ஏற்கனவே அதிரடியாக ரத்து செய்தது.
இந்நிலையில் டெல்லி மகளிர்நல ஆணையர் பதவிக் காலம் முடிவடைந்த நிலையில், அப்பதவிக்கு ஆம் ஆத்மி கட்சியின் தொண்டரும், அர்விந்த் கேஜ்ரிவாலின் ஆலோசகருமான ஸ்வாதி மாலிவால் நியமிக்கப்பட்டார். பின்னர் டெல்லி மகளிர் ஆணையத்தலைவராக ஸ்வாதி மாலிவால் பொறுப்பேற்றுக்கொண்டார்.
ஆனால் மகளிர் ஆணையத்தலைவராக பதவி நியமனத்தில் தம்மைக் கலந்து முடிவெடுக்காததும், நடைமுறை வழக்கங்களை கடைப்பிடிக்க மறந்தது ஏன்? என்று ஆளுநர் நஜீப் ஜங் கேள்வி எழுப்பி அவரது நியமனம் செல்லாது எனக் கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து இன்று அவருடைய அலுவலகம் மூடப்பட்டுவிட்டது, அலுவலகத்தில் அவருடைய பெயர் நீக்கப்பட்டு விட்டது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஸ்வாதி, ஆவணங்களில் கையெழுத்து இடக்கூடாது என்று என்னிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது; அலுவலகத்தை மூடிவிட்டார்கள்..பெயர் பலகையை நீக்கிவிட்டனர் என்று புலம்பியுள்ளார்.