டெல்லியில் ஓடும் பேருந்தில் மாணவியை சீரழித்துக் கொன்ற 4 பேருக்கும் தூக்கு உறுதி
டெல்லி: கடந்த 2012ம் ஆண்டில் டெல்லியில் ஓடும் பேருந்தில் 23 வயது பிஸியோதெரபி மாணவியை கொடூரமாக பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரின் மரண தண்டனையை டெல்லி உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
கடந்த 2012ம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் 23 வயது பிஸியோதெரபி மாணவி 6 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டு பேருந்தில் இருந்து கீழே வீசப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த மாணவி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் உயர் சிகிச்சைக்காக அவர் சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி டிசம்பர் 29ம் தேதி உயிர் இழந்தார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் மாணவியை சீரழித்து, தாக்கிய மைனர் உள்பட 6 பேரை கைது செய்தனர். இதில் பேருந்து ஓட்டுனரான ராம் சிங் திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டான். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மைனரை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தது.
மேலும் முகேஷ்(26), அக்ஷய் தாகூர்(28), பவன் குப்தா(19) மற்றும் வினய் சர்மா(20) ஆகியோருக்கு மரண தண்டனை விதித்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13ம் தேதி தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை உறுதிபடுத்தக் கோரி நீதிமன்றம் டெல்லி உயர் நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டது.
இந்நிலையில் மாணவியை சீரழித்து, கொன்ற வழக்கில் குற்றம் சாட்டப்ப்டடுள்ள 4 பேரின் தூக்கு தண்டனையையும் டெல்லி உயர் நீதிமன்றம் இன்று உறுதி செய்தது. மேலும் தண்டனையைக் குறைக்கக் கோரிய குற்றவாளிகளின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்லப்போவதாக குற்றவாளிகளின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.