ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அணி திரண்ட முஸ்லிம்கள்!
பெங்களூர்: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்திற்கு எதிராக கர்நாடகாவிலுள்ள மசூதி நிர்வாகங்கள் அணி திரண்டுள்ளன. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தீங்குகள் பற்றி அவை தங்கள் மத இளைஞர்களுக்கு எடுத்துரைக்கும் பணியை தொடங்கியுள்ளன. இதற்கு மாநில அளவில் நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது.
ஐஎஸ்ஐஎஸ் மற்றும் அல்-கொய்தா போன்ற தீவிரவாத இயக்கங்களின் செயல்பாடு காரணமாக, உலகம் முழுவதுமே இஸ்லாமிய மக்களை, சந்தேக கண்கொண்டு பார்க்க தொடங்கியுள்ளது. இஸ்லாமியர்கள் அந்த தீவிரவாத அமைப்புக்கு சப்போர்ட் செய்பவர்கள் என்ற எண்ணம் எழுந்துள்ளது.
இவ்வாறான எண்ணத்தை மாற்ற, கர்நாடக முஸ்லிம்கள் முடிவு செய்துள்ளனர். முஸ்லிம்களிலேயே சிலர் அறியாமல் ஐஎஸ்ஐஎஸ் போன்ற அமைப்புகள் மீது ஈடுபாடு கொண்டிருந்தால், அந்த எண்ணத்தை அழிக்க மசூதி நிர்வாகங்கள் களமிறங்கியுள்ளன.
பெங்களூரில் தொடக்கம்
பெங்களூரிலுள்ள, ஜாமியா மசூதி, முஸ்லிம் அறக்கட்டளை நிதியம் போன்றவை ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு எதிரான பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன. முதலில் பெங்களூரில் தொடங்கப்பட்ட விழிப்புணர்வு பிரச்சாரம் இப்போது மாநிலம் முழுவதிலுமுள்ள மசூதிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
கர்நாடகா முழுக்க
"பெங்களூரில் மட்டும் 140 மசூதிகள் உள்ளன. முதலில் இங்குதான் விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கப்பட்டது. அதன் வரவேற்பை பார்த்து, தற்போது அது மாநிலம் முழுமைக்கும் விரிவடைந்துள்ளது" என்கிறார், ஜாமியா மசூதி இமாம், முகமது மசூத் இம்ரான்.
வெள்ளிக்கிழமைகளில்
வெள்ளிக்கிழமைகளில் தொழுகை வேளை முடிந்ததும், மசூதிக்குள் கூட்டம் கூட்டப்படுகிறது. அதில், முஸ்லிம் சமூகத்தின் மூத்தவர்கள், இளைஞர்களுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்க தீமைகள் குறித்து எடுத்துரைக்கிறார்கள்.
சிடிகள் வினியோகம்
அன்பால் எதையும் சாதிக்க வேண்டும் என்று அறிவுரை கூறுகிறார்கள். மேலும், இந்த உரைகளை, சிடியாக மாற்றி, இஸ்லாமிய இளைஞர்கள் மத்தியில் சப்ளை செய்கிறார்கள்.
நல்ல வரவேற்பு
பெங்களூர் மட்டுமின்றி, மாநிலம் முழுவதிலுமுள்ள மசூதிகளிலும் இந்த நடைமுறை படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதற்கு இஸ்லாமியர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேரும் இந்தியர்களில் கர்நாடகாவை சேர்ந்தவர்கள்தான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.