2 ஆண்டுகளுக்கு பிறகு உச்சத்தை தொட்ட டீசல் விலை.. பொதுமக்கள் அதிருப்தி
கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாடு முழுவதும் உச்சத்தை அடைந்துள்ளது.
டெல்லி : பெட்ரோல், டீசல் எரிபொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக நாடு முழுவதும் டீசலின் விலை இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உச்சத்தை தொட்டு இருக்கிறது. இதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர்.
பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் நாடு முழுவதும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தற்சமயம் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 73.89 ரூபாயாகவும், ஒரு லிட்டர் டீசலின் விலை 65.23 ரூபாயாகவும் இருக்கிறது.
அதேபோல டெல்லியிலும் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 71.18 ரூபாயாகவும், டீசலின் விலை 61.24 ரூபாயாகவும் ஏற்றம் கண்டு உள்ளது. 2014ம் ஆண்டுக்கு பிறகு டீசலின் விலை இந்த அளவை எட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.
கச்சா எண்ணெய் விலை
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது தான் காரணம் என்று பெட்ரோலிய நிறுவனங்கள் தெரிவித்து உள்ளன. இரண்டு நாட்களுக்கு முன் 68 டாலராக இருந்த ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை தற்போது, 76.26 டாலராக அதிகரித்து உள்ளது.
விலை குறைய வாய்ப்பு இல்லை
தொடர்ந்து கச்சா எண்ணெய் உற்பத்தி குறைக்க பெட்ரோலிய நாடுகள் கூட்டமைப்பு முடிவு செய்திருப்பதாலும், கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு ரஷ்யா பெருமளவு குறைத்து இருப்பதாலும் இந்த விலை குறைய தற்போது வாய்ப்பு இல்லாததால் எரிபொருட்களின் விலை குறைய வாய்ப்பு இல்லை என்று பெட்ரோலிய நிறுவனங்கள் தெரிவித்து உள்ளன.
பொதுமக்கள் அவதி
கடந்த ஜீன் மாதத்தை விட 68% கச்சா எண்ணெய் விலை அதிகரித்து இருப்பதால் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையும் பெருமளவு உயர்ந்து உள்ளது. எரிபொருள்களுக்கு 8.87% இருந்த வீக்கம் டிசம்பர் மாதத்தில் 9.16 % அதிகரித்து இருப்பதாக மத்திய புள்ளியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்து உள்ளது. இன்னும் சில மாதங்களுக்கு இதே நிலை நீடிக்கும் என்றும், அதன் பிறகு உற்பத்தி அதிகரித்தால் கச்சா எண்ணெய் விலை குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மாற்று எரிபொருள் பயன்பாடு
தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலை அதிகரித்து இருப்பதால், இந்த எரிபொருளுக்கான மாற்று குறித்த ஆய்வுகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது. மின்சார வாகனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் வாகனங்களை வடிவமைக்குமாறு அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. இருப்பினும் பெட்ரோலிய பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் 194.6 மில்லியன் டன் பயன்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. டீசல் விலையேற்றம் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.