என்னது பா.ஜ.க. இடஒதுக்கீட்டுக்கு எதிரான கட்சியா? அப்படி சொன்னா நம்பவே நம்பாதீங்க... இது பிரதமர் மோடி
பாட்னா: இடஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்யும் எண்ணமே மத்திய அரசுக்கு இல்லை; பாரதிய ஜனதா கட்சி இடஒதுக்கீட்டுக்கு எதிரான என்ற பிரசாரத்தை நம்பவேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பீகார் சட்டசபை தேர்தலில் இடஒதுக்கீடு முக்கிய பிரச்சனையாக இடம்பெற்றுள்ளது. பிற்படுத்தப்பட்ட மக்கள் அனுபவித்து வரும் இடஒதுக்கீட்டு உரிமையை ஒழிக்கவே ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. உள்ளிட்ட இந்துத்துவா சக்திகள் முயற்சிப்பதாக ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் பிரசாரம் செய்து வருகின்றன.
ஆனால் பாரதிய ஜனதா கட்சியோ, நாங்கள் வெற்றி பெற்றாலும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரைத்தான் முதல்வராக நியமிப்போம்; இடஒதுக்கீட்டை ஒழித்துவிடமாட்டோம் என்று கூறி வருகிறது.
அதேநேரத்தில் இடஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்யும் நேரம் வந்துவிட்டதாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் உள்ளிட்டோர் பேசிவருவது பா.ஜ.க.வுக்கு பீகார் தேர்தல் களத்தில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
இந்த அச்சம் பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஏற்பட்டுள்ளதாகவே தெரிகிறது. மகாராஷ்டிராவில் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, இடஒதுக்கீட்டை மறுபரீசிலனை செய்யமாட்டோம் என்று உறுதி அளித்துள்ளார்.
மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி பேசியதாவது:
இடஒதுக்கீடு என்பது அரசியல் சாசனம் மூலமாக அம்பேத்கர் நமக்கு அளித்த உரிமை. அதை எவராலும் நம்மிடம் இருந்து பறித்துவிட முடியாது.
எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்து வருவது போல இடஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்யும் சிந்தனையே எங்களுக்கு கிடையாது.
பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் அமரும்போதெல்லாம் இதுபோன்ற விஷம பிரசாரத்தை சில சக்திகள் மேற்கொள்கின்றன. வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்திலும் இத்தகைய பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
குறிப்பாக தேர்தல் நேரத்தில் இதுபோன்ற வதந்திகள் கிளப்பிவிடப்படுகின்றன. நான் வறுமையை அனுபவித்தவன். ஆகையால் அடித்தட்டு மக்கள் மேன்மையடைவதற்காக நடவடிக்கைகளையே நான் மேற்கொள்கிறேன்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
பிரதமர் மோடி, இடஒதுக்கீட்டை பாதுகாப்போம் என்று உறுதியளிக்கும் நேரத்தில் இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறுகிற இடஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்களை பகிரங்கமாக கண்டிக்க முடியாமல் போனது ஏன்? என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
இதனிடையே ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் தமது ட்விட்டர் பக்கத்தில், பா.ஜ.கவும் ஆர்.எஸ்.எஸ்.-ம் தலித்துகளுக்கும் இடஒதுக்கீட்டும் எதிரிகள். இவர்களது 'குரு' கோல்வால்கர் தமது சிந்தனைக் கொத்துகள் நூலில், தலித்துகளுக்கும் இடஒதுக்கீட்டுக்கும் எதிராக கருத்துகளை கூறியுள்ளார் என்று பதிவிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.