பருவமழை குறைய வாய்ப்பு… வருணபகவானை கும்பிடச் சொல்லும் மத்திய அமைச்சர்
டெல்லி: இந்த ஆண்டு பருவமழை சராசரிக்கும் குறைவாக இருக்கும் என்று எதிபார்க்கப்படுவதால் நாட்டில் வறட்சி ஏற்படாமல் இருக்க வருண பகவானை பிராத்தனை செய்யுமாறு மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தன் கேட்டுக்கொண்டுள்ளார்.
தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் ஜூன் 1ஆம் தேதி தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு பருவமழை 5 நாட்கள் தாமதமாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்துடன் இந்த ஆண்டு பருவமழை வழக்கமான சராசரி அளவில் 88 சதவீதம் மட்டுமே இருக்க வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை
ஜுன் முதல் வாரம் துவங்கும் தென்மேற்கு பருவமழை இரண்டு வாரங்களுக்குள் நாட்டில் 50 சதவீதம் இடங்களுக்கு விரிவடையும், ஜுலை மாதம் மத்தியில் நாடு முழுவதும் பருவமழை பெய்யும்.

எல்நினோ
பசிபிக் கடற்பரப்பு தொடர்ந்து சூடாவதால் ஏற்படும் எல்நினோ விளைவின் காரணமாக பருவமழை போக்கில் மாற்றங்கள் ஏற்படுவதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வெயில் தணியும்
இதனிடையே டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வானிலை ஆராய்ச்சி துறை இயக்குனர் பி.பி. யாதவ், 5ஆம் தேதி வாக்கில் பருவமழை துவங்கினால் நாட்டில் பல மாநிலங்களில் மக்களை சுட்டெரிக்கும் கோடையின் உக்கிரம் தனியும் என கூறியுள்ளார்.

வருணபகவான் கருணை
90 சதவீதத்திற்கும் குறைவாக மழை பெய்தால் அது வறட்சி ஆண்டாக அமையும், எனவே மழை முழுமையாக கிடைக்க நாட்டு மக்கள் வருண பகவானிடம் பிராத்திக்க வேண்டும் என மத்திய அறிவியல் தொழில் நுட்பம் மற்றும் புவியியல் துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் கேட்டுக்கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications