திருப்பதி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது: சென்னையில் இருந்து சென்ற குடை
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 9 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவ விழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா தொடக்க நாளான நேற்று மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. இதையடுத்து கருடக் கொடியுடன் உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேதமலையப்ப சுவாமிகள் மாடவீதிகளில் உலா வந்தனர்.
கருடக்கொடி ஏற்றம்
பின்னர் உற்சவ மூர்த்திகள் மற்றும் சுவாமியின் சேனாதிபதியான விஸ்வகேசவர் முன்னிலையில், வேத மந்திரங்கள் முழங்க மாலை 5.36 - 6 மணி இடையே பிரம்மோற்சவ கருடக் கொடி, தங்கக் கொடி மரத்தில் ஏற்றப்பட்டது. இதில் தேவஸ்தான அதிகாரிகள், ஜீயர்கள், வேத பண்டிதர்கள் மற்றும் பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர்.
சந்திரபாபு நாயுடு வஸ்திரம்
பிரம்மோற்சவ விழா தொடக்க நாளான நேற்று இரவு, ஆந்திர அரசு சார்பில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது மனைவி புவனேஸ்வரியுடன் பட்டு வஸ்திரங்களை தலையில் சுமந்து வந்து ஏழுமலையானுக்கு காணிக்கையாக வழங்கினார்.
பெரிய சேஷ வாகனம்
பிரம்மோற்சவத்தின் முதல் நாள் இரவு ஆதிசேஷனாக கருதப்படும் பெரிய சேஷ வாகனத்தில் உற்சவர்கள் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி திருமாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
வாகன சேவையின் முன்பு, யானை, குதிரை,காளை போன்ற பரிவட்டங்கள் சென்றன. பின்னர் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த நடனக் கலைஞர்களின் நிகழ்ச்சிகள் கண்ணைக் கவரும் வகையில் இருந்தன.
சிறிய சேஷ வாகனம்
பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று, சனிக்கிழமை காலை 9 மணியளவில் சிறிய சேஷ வாகன சேவையும், இரவு 9 மணியளவில் அன்ன வாகன சேவையும் நடைபெற உள்ளது.
திருக்குடை ஊர்வலம்
இதனிடையே சென்னையில் திருப்பதி திருக்குடை ஊர்வலம் பூக்கடை சென்ன கேசவ பெருமாள் கோவிலில் இருந்து புறப்பட்டது.
இதனையொட்டி சென்ன கேசவ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடை பெற்றது. பின்னர் திருக்குடைகள் கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. பக்தர்கள் பெருமாள் பாடல்கள் பாடியவாறும், பக்தி கோஷங்கள் முழங்க சென்றனர்.
கவுனி தாண்டிய குடை
திருக்குடைகள் என்.எஸ்.சி. போஸ்ரோடு, கோவிந்தப்ப நாயக்கன் தெரு வழியாக பைராகி மடம் சென்று அங்கிருந்து வ.உ.சி. சாலை வழியாக மாலையில் கவுனி தாண்டியது. பின்னர் அயனாவரம், பெரம்பூர், அகரம் ஜங்ஷன், திரு.வி.க. நகர் வழியாக வில்லிவாக்கம் தாமோதர பெருமாள் கோவிலை இரவு அடைந்தது.
திருப்பதி செல்லும் குடை
27ஆம் தேதி அங்கிருந்து புறப்பட்டு பாடி, முகப்பேர், சந்தான சீனிவாச பெருமாள் கோவில், அம்பத்தூர் முருகன் கோவில் திருமுல்லைவாயல் பச்சையம்மன் கோவில் வழியாக ஆவடி காமராஜர் நகர் பெருமாள் கோவிலை இரவு அடைகிறது. 29-ஆம் தேதி வேன் மூலம் திருப்பதியை அடைந்து ஏழுமலயானுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. திருக்குடைகள் செல்லும் வழி நெடுகிலும் பெண்கள் கற்பூரம் ஏற்றியும், தேங்காய் பழம் உடைத்தும் வழிபட்டனர்.
கருடசேவை தினத்தில்
செப்டம்பர் 30-ஆம் தேதி இரவு பிரம்மோற்சவத்தின் முக்கிய வாகனமான கருட சேவை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதற்கு சுமார் 5 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பதால் வாகன மண்டபம் அருகே தடுப்பு கம்பிகள் அகற்றப்பட்டுள்ளன. ரூ. 300 சிறப்பு கட்டண டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டும் பிரம்மோற்சவ விழாவின் போது தரிசனத்திற்கு அனுமதி வழங்க தேவஸ்தானம் தீர்மானித்துள்ளது. சுப்ரபாத சேவை தவிர அனைத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.