கேஜரிவாலுக்கு நெருக்கடி? 20 ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரை
டெல்லியில் 20 ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
டெல்லி: டெல்லியில் 20 ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் ஆம் ஆத்மி அரசு கடந்த 2015-ஆம் ஆண்டு பதவியேற்றது. அப்போது அல்கா லம்பா, ஜர்னைல் சிங், ஆதர்ஷ் சாஸ்திரி, ராஜேஷ் குப்தா உள்ளிட்ட 20 எம்எல்ஏக்களை பார்லிமென்ட்ரி செக்ரெட்டரி எனப்படும் அமைச்சர்களின் செயலாளர்கள் என்ற பதவியில் அமர்த்தினார் முதல்வர் கெஜ்ரிவால்.
ஆனால் எம்.எல்.ஏ.க்களாக இருக்கும் அதே நேரத்தில் இரட்டை ஆதாயம் தரும் வகையில் அமைச்சர்களின் செயலாளர்களின் பொறுப்புகளை 20 எம்.எல்.ஏக்கள் வகிப்பதாக பாஜக, காங்கிரஸ் கட்சியினர் குற்றச்சாட்டுக்களை முன் வைத்தனர். இவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் புகார் தரப்பட்டது.
இதையடுத்து பார்லிமென்ட்ரி செக்ரெட்டரி எனப்படும் அமைச்சர்களின் செயலாளர்கள் பதவிகளை இரட்டை ஆதாய பட்டியலில் இருந்து நீக்கி கேஜரிவால் அரசு முன் தேதியிட்டு கடந்த 2016-இல் சட்டதிருத்த மசோதா கொண்டுவந்தது. இதற்கு அப்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டார்.
இந்நிலையில் இரட்டை ஆதாயம் பெற்ற 20 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இதனடிப்படையில் 20 ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் மீது குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது.
20 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்தால் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நெருக்கடி ஏற்படலாம் என கூறப்படுகிறது.