ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்.. கார்த்தி சிதம்பரம் நேரில் ஆஜராக அமலாக்கத்துறை நோட்டீஸ்
டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில் விளக்கம் அளிக்குமாறு, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன், கார்த்தி சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் அன்னிய முதலீடு பெறுவதற்கு, அன்னிய முதலீடு ஊக்குவிப்பு வாரியம் அனுமதி வழங்கியது. இதில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக, ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், ஐஎன்எக்ஸ் மீடியா, அதன் இயக்குனர்கள் பீட்டர் முகர்ஜி, இந்திராணி முகர்ஜி ஆகியோர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகும்படி கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை புதிய சம்மன் அனுப்பியுள்ளது. ஜனவரி 11ம் தேதி அவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே அனுப்பிய சம்மன்களுக்கு நேரில் ஆஜராக விலக்கு அளிக்க கார்த்தி சிதம்பரம் கோரிக்கைவிடுத்து, நீதிமன்றத்தை அணுகியுள்ளது குறிப்பிடத்தக்கது.