கத்காரியைத் தொடர்ந்து, வெங்கய்யா, ரவிசங்கர் பிரசாத்தை சந்தித்த எடப்பாடி!
மத்திய அமைச்சர்கள் வெங்கய்யா நாயுடு, ரவிசங்கர் பிரசாத்தை இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் சந்தித்து பேசினார்
டெல்லி: மூன்று நாட்கள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய அமைச்சர்கள் நிதின்கத்காரி, வெங்கய்யா நாயுடு, ரவிசங்கர் பிரசாத் ஆகியோரை நேரில் சந்தித்து பேசினார். அப்போது அவர் தமிழக திட்டங்கள் தொடர்பாக ஆலோசித்தாக கூறப்படுகிறது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று பிற்பகல் மத்திய நகர்ப்புறவளர்ச்சித்துறை மற்றும் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் எம்.வெங்கய்ய நாயுடுவை அவரது அமைச்சகத்தில் சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட ஸ்மார்ட் நகரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். தமிழக அரசு கேபிள் டிவிக்கு டிஜிட்டல் லைசென்ஸ் அனுமதி கிடைக்காமல் உள்ளது. இது குறித்தும் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வெங்கய்யா நாயுடு, தமிழக அரசுக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அழைக்கும் என்று கூறினார். தமிழக அரசு கேபிள் டிவிக்கு டிஜிட்டல் லைசென்ஸ் அனுமதி கொடுப்பது பற்றி விரைவில் முடிவெடுக்கப்படும் என்றும் வெங்கய்யா நாயுடு கூறினார்.
வெங்கய்யா உடனான சந்திப்புக்குப் பிறகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய சட்டம் மற்றும் நீதி மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை சந்தித்து தமிழகத்திற்கு தேவையான திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
தமிழக அரசு கேபிள் டிவியை டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாற்ற அனுமதிப்பது குறித்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிரதமர் நரேந்தர மோடிக்கு மூன்று முறை கடிதம் எழுதியிருந்தார். ஒருமுறை நேரில் சந்தித்தும் வலியுறுத்தி இருந்தார். ஆனால் மத்திய அரசு இதுவரை அனுமதி அளிக்காமல் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து இன்று டெல்லி சென்ற எடப்பாடி பழனிச்சாமி மத்திய அமைச்சரிடம் டிஜிட்டல் லைசென்ஸ் தொடர்பாக பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications