தீவிரவாதிகளுக்கு மட்டுமே தூக்கு- எஞ்சிய வழக்கில் தூக்கு வேண்டாம்- சட்ட ஆணையம் பரிந்துரை!
டெல்லி: இந்தியாவில் தூக்கு தண்டனையை ஒழிப்பதற்கு முதல் கட்டமாக தீவிரவாதிகளுக்கு மட்டுமே தூக்கு தண்டனையை நிறவேற்றலாம்; இதர வழக்குகளில் தூக்கு தண்டனை விதிக்க கூடாது என சட்ட ஆணையம் பரிந்துரைக்க உள்ளது.
இந்தியாவில் தூக்கு தண்டனையை ஒழிக்க வேண்டும் என்பது பல்வேறு தரப்பினரின் நீண்டகால கோரிக்கை. இதையடுத்து இதுபற்றி ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி சட்ட ஆணையத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது.
மாநில அரசுகள், சட்ட நிபுணர்கள் மற்றும் பல்வேறு துறையினரிடம் இது தொடர்பாக சட்ட ஆணையம் கருத்துக்கள் கேட்டது. அதன் அடிப்படையில் அறிக்கை ஒன்றை சட்ட ஆணையம் தயாரித்துள்ளது.
இந்த அறிக்கை அடுத்த வாரம் மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்படும் என்று தெரிய வந்துள்ளது. இதில், இந்தியாவில் பொதுவாக தூக்கு தண்டனை வேண்டாம். மிகப் பெரிய அளவில் நாசவேலைகளில் ஈடுபடும் தீவிரவாதிகளுக்கு மட்டும் தூக்குதண்டனையை நிறைவேற்றலாம் எனக் கூறப்பட்டுள்ளதாம்.
இந்த பரிந்துரையில் அடிப்படையில் முடிவுகள் எடுத்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட உள்ளது. உலகம் முழுவதும் 98 நாடுகளில் மரண தண்டனை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு உள்ளது. அந்த வரிசையில் இந்தியாவையும் இடம் பெற செய்யும் முயற்சியின் முதல் கட்டம் இது.