கர்நாடகா தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது முதல் ஆயிரத்தெட்டு பிரச்சினைகள்
கர்நாடக தேர்தலையொட்டி பெரும்பாலான பகுதிகளில் வாக்குப் பதிவு எந்திரங்கள் கோளாறு அடைந்தததால் வாக்குச் சாவடிகளில் வாக்குவாதம் ஏற்பட்டது.
பெங்களூர்:கர்நாடகத்தில் பெங்களூரு, ஹூப்பள்ளி உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் வாக்கு பதிவு எந்திரங்கள் கோளாறு அடைந்ததால் வாக்குச் சாவடியில் அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே கர்நாடக தேர்தல் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கிய நிலையில் பெரும்பாலான தொகுதிகளில் வாக்கு பதிவு இயந்திரம் கோளாறு அடைந்தது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தேர்தல் அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். சில வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களின் பெயரே விடுபட்டு கிடந்தது. பெலகாவி பகுதியில் புர்காவை நீக்க சொன்னதால் முஸ்லிம் பெண்கள் மறுப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தனர்.
ராஜாஜி நகர் தொகுதியில் மின்சாரம் இல்லாததால் மெழுகுவர்த்தி ஏற்றி சில மணி நேரம் வாக்குப் பதிவு நடந்தது. வாக்கு பதிவு எந்திரம் கோளாறு ஏற்பட்டதால் பனாஹட்டி தொகுதியில் 2 மணிநேரம் தாமதமாக தொடங்கியது வாக்கு பதிவு. பகால்கோட் பகுதியில் 167 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு எந்திரம் பழுதானதால் வாக்களிக்க மக்கள் நீண்ட நேரம் காத்து கிடக்கின்றனர்.
அதுபோல் ஹனுமந்த் நகரில் உள்ள பிஇஎஸ் கல்லூரி, பவானிநகர் , யத்கீரில் உள்ள எம் எம் டோடியிலும் வாக்குப் பதிவு எந்திரம் கோளாறு அடைந்ததால் வாக்காளர்கள் காத்து கிடக்கின்றனர். மேலும் ஹப்பாளியில் பழைய பேருந்து நிலையத்தில் பேருந்துகள் பற்றாக்குறையால் வாக்காளர்கள் அதற்கான மாற்று ஏற்பாடுகளை தேடி அலைகின்றனர்.
ஹூப்பள்ளியில் எம்பி பிரகலாத் ஜோஷியும் வாக்களிக்க வரிசையில் நின்று கொண்டிருந்தார். வாக்கு பதிவு எந்திரம் கோளாறு, பவர் கட், வாக்காளர்களின் பெயர் விடுபட்டுள்ளது என தேர்தல் களமே அமர்க்களமாகியுள்ளது.