ட்ரம்ப் மகள் வருகைக்காக வாங்கிய அலங்காரப் பொருட்கள்... ஆட்டைய போட்டவர்களை தேடுகிறது ஐதராபாத் போலீஸ்!
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஐதராபாத் வந்திருந்த போது அலங்காரத்திற்காக வாங்கப்பட்டிருந்த பூந்தொட்டிகளை மர்ம நப்ர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
ஹைதராபாத் : கடந்த 29ம் தேதி ஹைதராபாத் வந்திருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மகளை வரவேற்பதற்காக விதவிதமான அலங்காரப் பூந்தொட்டிகள் ரூ. 3.50 லட்சம் மதிப்பில் வாங்கப்பட்டிருந்துள்ளன. அவை தற்போது மர்ம நபர்களால் திருடப்பட்டுள்ளது.
பச்சை பசேல் வெர்டிகல் கார்டன் முதல் விலங்குகளின் உருவங்கள் கொண்ட பூந்தொட்டிகள் என ஹைதராபாத் ஐடி காரிடர் முழுவதும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் மகளும், வெள்ளை மாளிகை ஆலோசகருமான இவாங்காவை வரவேற்பதற்காக வாங்கப்பட்டிருந்துள்ளன. கடந்த நவம்பர் 29ம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்முனைவோர் மாநாட்டில் பங்கேற்பதற்காக இவாங்கா இந்தியா வந்திருந்தார்.
அவர் வருகையின் போது ஹைதராபாத்தை எழில் நகரமாக காட்சிபடுத்துவதற்காக ஹைதராபாத்தின் ஐடி காரிடார் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒரு வாரத்திற்குப் பிறகு அவை பழைய நிலைக்கே வந்துவிட்டது. ஏன் தெரியுமா அவற்றில் சில திருடப்பட்டு விட்டதால் எஞ்சியவையும் திருடப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.
பூந்தொட்டிகளை காணவில்லை
சர்வதேச தொழில்முனைவோர் மாநாடு முடிந்த சில நாட்களில் சைபெராபாத் போலீசாருக்கு பல்வேறு புகார்கள் வந்துள்ளன. அதில் பல்வேறு பகுதிகளில் இருந்து வண்ண அலங்கார பூந்தொட்டிகள் திருடப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. ஹைதராபாத் மாநகராட்சி சுமார் 5 ஆயிரம் பூச்செடிகளை கொண்டபூர் - கச்சிபவுலி இடையிலான பகுதியில் வைத்துள்ளனர்.
விலங்குகளின் உருவம் கொண்ட பூந்தொட்டி
அந்த பூந்தொட்டிகள் ஒவ்வொன்றின் மதிப்பு ரூ. 6 ஆயிரம். அதில் என்ன அப்படி சிறப்பு என்கிறீர்களா யானை முகம் உருவத்தில், அன்னப்பறவை வடிவத்தில் என விலங்குகளின் உருவ அடிப்படையில் அலங்காரப் பூந்தொட்டிகளாக அவை அழகாக உருவாக்கப்பட்டிருந்தன. அந்த அலங்காரப் பூந்தொட்டிகள் தான் தற்போது திருடுபோயுள்ளன.
சிசிடிவி காட்சிகள் அடிப்படையில்
அலங்காரப் பூந்தொட்டிகளை திருடியது யார் என்று சிறப்பு போலீஸ் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடும் பணியும் நடைபெற்று வருகிறது.
10 கிலோ வரை எடை
இதனிடையே திருடப்பட்ட அலங்காரப் பொருட்களின் மதிப்பு ரூ. 3.50 லட்சம் இருக்கலாம் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஒவ்வொரு பூந்தொட்டியும் சுமார் 8 முதல் 10 கிலோ வரை எடை இருக்கும் நிலையில் அதனை தனியாட்கள் எடுத்துச் சென்றிருக்க முடியாது. ஏதேனும் வாகனம் வைத்து தான் எடுத்துச் சென்றிருக்க முடியும் என்று காவல்துறையினர் சந்தேகிகின்றனர்.
மாநகராட்சி நடவடிக்கை
அலங்காரப் பூந்தொட்டிகள் சில திருடப்பட்ட நிலையில் எஞ்சிய பூந்தொட்டிகளையும், அலங்காரப் பூச்செடிகளையும் ஹைதராபாத் மாநகராட்சியினரே அகற்றியுள்ளனர். இருக்குறதாவது மிஞ்சட்டும் அதையும் ஆட்டைய போடுறதுக்கு முன்னாடி சுதாரிப்பா இருக்காங்கலாம்.