விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது- மத்திய அரசு
ராஜ்கோட்: இந்திய வங்கிகளில் ரூ9,000 கோடி கடனை பெற்றுவிட்டு திருப்பி கட்டாமல் இங்கிலாந்துக்கு தப்பி ஓடிய தொழிலதிபர் விஜய்மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்து வரத் தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என மத்திய நிதித் துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் 2 ஆண்டு கால சாதனை விளக்க நிகழ்ச்சி, குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, மத்திய நிதித் துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியின் போது விஜய் மல்லையா விவகாரம் தொடர்பாக மத்திய நிதித் துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அவர், வங்கிகளில் வாங்கிய கடனை வேண்டுமென்றே திருப்பி செலுத்தாதவர் என விஜய் மல்லையா அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த பிரச்சனையில் பிரிட்டனுடன் இணைந்து சட்ட விதிமுறைகளையே பின்பற்ற வேண்டும். விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்கும்படி, பிரிட்டனிடம் கோருவது மட்டும்தான் ஒரே வழி. ஆனால், இதுதொடர்பாக அந்நாட்டின் நடைமுறைகள் சிக்கல் நிறைந்தவையாக உள்ளன. அவரை இந்தியா அழைத்து வர தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிரிட்டனின் ஒப்புதல் கிடைத்த பின்னரே, விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு கொண்டு வர முடியும் என்றார்.