சன் டிவி சேனல்களுக்கு பாதுகாப்பு ஒப்புதல் விவகாரம்… இறுதி முடிவுக்கு தயாராகும் மத்திய அரசு
டெல்லி: சன் குழும சேனல்களுக்கு பாதுகாப்பு ஒப்புதல் வழங்குவதில் வெவ்வேறு அமைச்சகங்கள் வெவ்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருவதால், இறுதி முடிவு கலந்து ஆலோசித்து கூட்டாகச் சேர்ந்து எடுக்கப்படும் என்று மத்திய அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொலைக்காட்சி சேனல்கள் நடத்துவதற்கு மத்திய அரசிடம் பாதுகாப்பு ஒப்புதல் பெற வேண்டும். சன் குழுமம் தனது 33 சேனல்களுக்கு பாதுகாப்பு ஒப்புதலை அடுத்த பத்தாண்டுகளுக்கு நீட்டிக்கக் கோரி விண்ணப்பித்தது. இதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு ஒப்புதல் வழங்க மறுத்து விட்டது.
சன் குழும உரிமையாளர்கள் கலாநிதி மாறன் மற்றும் தயாநிதி மாறன் ஆகியோர் மீது நிலுவையிலுள்ள வழக்குகள் காரணமாக பாதுகாப்பு ஒப்புதல் வழங்க உள்துறை அமைச்சகம் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில் மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் இவ்விஷயத்தில் உள்துறை அமைச்சகத்துடன் முரண்பட்டது. இது தொடர்பாக சட்ட அமைச்சகத்தை அணுகி அதன் கருத்தைக் கேட்டது. அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி, "பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் அவர்கள் மீது இல்லை. ஊழல் தொடர்பான வழக்குகளே இருப்பதால், பாதுகாப்பு ஒப்புதல் வழங்கலாம். ஊழல் தொடர்பு இருப்பதால் அதனடிப்படையில் பாதுகாப்பு ஒப்புதல் வழங்காமல் நிராகரிக்க வேண்டியதில்லை" எனத் தெரிவித்திருந்தார்.
எனினும் பாதுகாப்பு ஒப்புதலை சன் குழு மத்துக்கு வழங்கப்போவதில்லை என உள்துறை அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் இது குறித்து கேட்டுக் கொண்டாலும், சன் நெட்வொர்க் உரிமையாளர்கள் பல விதிமீறல்கள் செய்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதோடு சன் குழும சேனல்கள் கொடுத்த அனுபவத்தையடுத்து, தனியார் தொலைக்காட்சி சேனல்களுக்கு உரிமம் வழங்க சில நிபந்தனைகளை விதித்துள்ளது மத்திய உள்துறை அமைச்சகம்.
எனினும், இந்த விவகாரத்தில் சன் குழு நிறுவனங்களின் அலைவரிசைகளுக்கு அனுமதி வழங்கக் கூடிய வாய்ப்புகள் உள்ளதா என்பதை ஆராயும்படி செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சகம் அதன் அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
செய்தி ஒலிபரப்புத்துறை
சன் குழும நிறுவன அலைவரிசைகளுக்கு பாதுகாப்பு உரிமம் வழங்கப்படாவிட்டால், இந்தியாவில் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் முதலீட்டில் அந்நிறுவனம் தொடங்கிய தொழில் பாதிக்கும். இது இந்தியாவில் தொழில் முதலீடு செய்யும் பல நிறுவனங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் என்ற கோணத்தில் இந்த விவகாரத்தை மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அணுகுகிறது.
கொள்கை அறிவிப்பு
ஆனால், ஊழல்வாதிகள், முறைகேடு செய்பவர்கள், பணப் பரிவர்த்தனை மோசடி செய்வோர், போலி பாஸ்போர்ட் விவகாரம், குற்ற வழக்குகளில் நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்வோர், தண்டனை விதிக்கப்பட்டோர் உள்ளிட்டோர் சார்ந்த தொலைக்காட்சி சேவைக்கு பாதுகாப்பு உரிமம் வழங்கக் கூடாது என்ற புதிய நிலைப்பாட்டை உள்துறை எடுத்துள்ளது. இது தொடர்பான கொள்கை அறிவிப்பு ஒரிரு வாரங்களில் வெளியாகும்.
எந்தெந்த சேனல்களுக்கு சிக்கல்
2001, 2002-இல் தொலைக்காட்சி சேவை தொடங்க முறையான அனுமதி பெற்ற சன் டிவி, சன் நியூஸ், சூர்யா டிவி, சுட்டி டிவி, சன் மியூசிக், ஆதித்யா டிவி, கிரண் டிவி, உதயா காமெடி (உஷே டிவி), குஷி டிவி, சிண்டு டிவி, கே டிவி, உதயா டிவி, உதயா மியூசிக், ஜெமினி டிவி, ஜெமினி காமெடி ஆகிய 15 தொலைக்காட்சி அலைவரிசைகளின் உரிமம் 2011, 2012 ஆகிய ஆண்டுகளில் அடுத்தடுத்து காலாவதியாகின. இதன் பிறகு இத்தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கான உரிமம் ஆண்டுதோறும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
நிலுவையில் வழக்குகள்
இந்நிலையில், குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு எதிரான ஏர்செல் - மேக்சிஸ் வழக்கு, அது தொடர்புடைய அமலாக்கத் துறையின் பணப் பரிவர்த்தனை வழக்கு ஆகியவை டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. மேலும் ஒரு வழக்கு சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதைத் தொடர்ந்தே உரிமத்தை புதுப்பிக்கக் கோரி சன் குழும நிறுவனம் இந்த ஆண்டு அளித்த அலைவரிசைகளின் விண்ணப்பத்தைப் பரிசீலிக்க உள்துறை தயக்கம் காட்டி வருகிறது.
கூட்டாக முடிவு எடுப்போம்
இந்நிலையில் மத்திய அரசின் உயரதிகாரி ஒருவர் கூறும்போது, "கருத்தை வெளியிடும் உரிமை உட்பட இவ்விவகாரத்தில் வெவ்வேறு கோணங்கள் உள்ளன. வெவ்வேறு அமைச்சகங்கள் வெவ்வேறு பார்வையைக் கொண்டிருக்கலாம். ஜனநாயகத் தில் இருவேறு அணுகுமுறைகள் இருப்பது சகஜமே. ஆனால், இறுதி முடிவு என்பது கூட்டாகச் சேர்ந்து எடுக்கப்படும்" என்று கூறியுள்ளார்.