கோவாவில் சினிமா பாணியில் ஆற்றுக்குள் பாய்ந்த கார். . 4 பேர் கதி என்ன? மீட்பு பணி தீவிரம்
பானாஜி: கோவா மாநிலத்தில் முன்னால் சென்ற காரை முந்த நினைத்து வேகமாக சென்ற கார் ஒன்று தடுப்புச்சுவரில் மோதி ஆற்றுக்குள் பாய்ந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த காரில் இருந்த 4 பேரின் கதி என்னவென்றும் தெரியவில்லை.
இந்தியாவின் மேற்கு கடற்கரைப் பகுதியில் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா எல்லைகளுக்கு இடையே அமைந்துள்ள மிகச்சிறிய மாநிலம் கோவா.
இந்தியாவின் முக்கிய சுற்றுலாதலங்களில் கோவாவும் ஒன்றாகும். அரபிக்கடல் ஓரத்தில் அமைந்துள்ள கோவாவுக்கு ஆண்டு தோறும் உள்நாட்டில் இருந்தும் வெளிநாட்டில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வருகை தருகின்றனர்.''
மரணத்தின் விளிம்பை காட்டிய செல்பி.. காவிரியில் வெள்ளத்தில் சிக்கிய 3 பேர் மீட்பு.. திக்திக் நிமிடம்
சுற்றுலா பயணிகள்
அதுவும் குளிர்காலம் என்றால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் இருக்கும். குளிர் காலத்தில் இருக்கும் சிறப்பான தட்பவெப்ப சூழலை அனுபவித்து மகிழ்வதற்காகவே சுற்றுலா பயணிகள் கோவா மாநிலத்துக்கு படையெடுப்பர். கோடைக்காலத்தில் இந்திய சுற்றுலா பயணிகளின் வருகை அதிக அளவில் இருக்கும் என்றே சொல்லலாம். இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து கோவாவுக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் அங்குள்ள கடற்கரையில் கொண்டாடி மகிழ்வர். வசதி படைத்த இளைஞர்கள் பலரும் கார்களில் கோவா சென்று அங்கு செய்யும் அலப்பறைகளும் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகும்.
ஆற்றுக்குள் பாய்ந்த கார்
இந்த நிலையில், கோவாவில் உள்ள மிகப்பெரிய ஆறான ஜூவாரி ஆற்றில் மேலே செல்லும் பாலத்தில் சென்ற எஸ்.யூ.வி ரக கார் ஒன்று இன்று அதிகாலை ஆற்றுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது. சினிமாவில் கார் ஆற்றுக்குள் பாய்வது போல அந்த கார் மிக வேகமாக வந்து பாலத்தின் தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு ஆற்றுக்குள் பாய்ந்தது. முன்னால் சென்ற காரை முந்த முயற்சித்த போது தான் இந்த விபத்து நடந்துள்ளது. அசூர வேகத்தில் சென்ற கார் பாலத்தின் பெரிய இரும்பு தூண்களில் மோதி ஆற்றுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானதாக நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். சினிமா பாணியில் நடைபெற்ற இந்த விபத்து தலைநகர் பானஜியில் இருந்து 15 கி.மீட்டர் தொலைவில் நடைபெற்றுள்ளது.
4 பேர் கதி என்ன?
அதிகாலை 1.10 மணியளவில் நடந்த இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு மீட்பு பணியினர் விரைந்து சென்றனர். தீயணைப்பு படையினருடன், கடற்படையினர் மற்றும் அவசரகால மீட்பு குழுவினர் இணைந்து ஆற்றுக்குள் விழுந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். காரில் 4 பேர் இருந்ததாக கூறப்படும் நிலையில், இதுவரை அவர்கள் யாரும் மீடகப்படவில்லை. ஆற்றுக்குள் பாய்ந்த காரையும் இன்னும் கண்டுபிடிக்க முடியாததால் காருக்குள் இருந்த 4 பேரின் கதி என்னவென்று தெரியவில்லை. மேலும் அவர்கள் உயிருடன் இருப்பார்களா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
தீவிர தேடுதல் வேட்டை
விபத்துக்குள்ளான காரில் 4 பேர் பயணித்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். மேலும் பெண் ஒருவரே காரை ஓட்டிசென்றதாகவும் கூறப்படுகிறது. அதிகாலை 1 மணியில் இருந்து மீட்புக் குழுவினர் முழு வீச்சில் காரில் பயணித்தவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய கடற்படையை சேர்ந்த நீர்மூழ்கி வீரர்களும் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.