ஐஎஸ்ஐஎஸ்ஸில் இணைந்த மலையாள மாஜி பத்திரிக்கையாளர்
திருவனந்தபுரம்: கேரளாவைச் சேர்ந்த முன்னாள் பத்திரிகையாளர் ஒருவர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைந்துள்ளார்.
இது தொடர்பாக எட்டு மாதங்களுக்கு முன்னதாகவே மத்திய உளவுத்துறை, கேரள உள்துறை அமைச்சகத்திற்கு ரகசிய தகவல் தெரிவித்துள்ளது. இது சமீபத்தில் டெல்லியில் டிஜிபி அளித்த பேட்டியில் உறுதி செய்யப் பட்டுள்ளது.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்துள்ள முன்னாள் பத்திரிகையாளர் பாலக்காட்டில் இயங்கி வந்த மலையாள செய்திதாளில் பணி புரிந்து வந்தவர். தனது பணியின் போது ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாத இயக்கம் குறித்து தெரிந்து கொண்ட அவர், தீவிரவாதிகளின் கொள்கைகளால் ஈர்க்கப் பட்டு தீவிரவாத இயக்கத்தில் இணைந்துள்ளார்.
பத்திரிகையாளராக சொற்ப காலமே பணி புரிந்த இவர், சமூக வலைதளங்கள் மூலமாக ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதிகளைத் தொடர்பு கொண்டுள்ளார். தீவிரவாதிகளுடனான இவரது தொடர்பைத் துண்டிக்க, குடும்பத்தாரின் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.
இதற்குள்ளாக இவரின் சமூக வலைதள நடவடிக்கைகளின் அடிப்படையில் சந்தேகம் கொண்ட போலீசார், இவரை கண்காணிக்கத் தொடங்கியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து தந்தையின் வேண்டுகோளை ஏற்று கேரளாவில் தனது வேலையை ராஜினாமா செய்த இவர், அதே பத்திரிகையின் சர்வதேச செய்தியாளராக வளைகுடா நாட்டிற்கு சென்றார். அந்த சமயத்தில் தன் குடும்பத்தாரின் எதிர்ப்பையும் மீறி சிரியா சென்ற அவர், அங்கு ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைந்துள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைந்த தகவல், லண்டனில் பிடிபட்ட தீவிரவாதி ஒருவர் மூலம் போலீசாருக்குத் தெரிய வந்தது.
இதன் மூலம், ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் இந்தியாவைச் சேர்ந்த 7 பேர் இணைந்திருப்பது அதிகாரப்பூர்வமாக தெரிய வந்துள்ளது.