கர்நாடகாவில் இன்றும் தமிழக லாரிகள் தீக்கிரை.. பெங்களூரில் 312 வன்முறையாளர்கள் கைது! #bengaluru
பெங்களூர்: கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் இன்று தமிழக லாரி தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. பெங்களூரிலும் ஒரு லாரி தீக்கிரையானது.
தமிழகத்திற்கு காவிரியிலிருந்து 10 நாட்களுக்கு தினமும் 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. கர்நாடகா தாக்கல் செய்த சீராய்வு மனுவை விசாரித்த நீதிமன்றம், நேற்று முதல் தினமும் தலா 12 ஆயிரம் கன அடி தண்ணீரை 20ம் தேதிவரை தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
சீராய்வு மனு காரணமாக கூடுதலாக 30 ஆயிரம் கன அடி தண்ணீர், தமிழகத்திற்கு கிடைக்கும். இதனால் மேலும் கோபமடைந்த கன்னட அமைப்புகள் மற்றும் சில விஷமிகள் நேற்று பெங்களூரில் பெரும் கலவரங்களை நடத்தினர்.
இன்று கலவர பாதிப்பு வெகுவாக குறைந்திருந்தாலும், சில இடங்களில் தாக்குதல்கள் தொடர்ந்தன. மாநிலத்தின், சித்ரதுர்கா அருகே தமிழக பதிவெண் கொண்ட லாரி ஒன்று, தீக்கிரையாக்கப்பட்டது. பெங்களூர் பீன்யாவில் பிளாஸ்டிக் பொருள் ஏற்ற வந்த தமிழக லாரியும் தீக்கிரையாக்கப்பட்டது.
பெங்களூர் டிம்பர் யார்டு லோஅவுட்டில் நேற்று பாதி எரிக்கப்பட்ட நிலையில் எஸ்ஆர்எஸ் பஸ்சை கலவரக்காரர்கள் விட்டுவிட்டு ஓடினர். இன்று மீண்டும் வந்து அதற்கு தீ வைத்துள்ளனர். அந்த பஸ் முற்றிலும் எரிந்தது. போலீஸ் பாதுகாப்புக்கு நடுவேயும், இந்த தாக்குதல் நடந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, பெங்களூரில் கலவரத்தில் ஈடுபட்டதாக இதுவரை 312 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கலவரத்தில் ஈடுபட்டோர் குறித்த வீடியோ, போட்டோக்களை ஷேர் செய்ய காவல்துறை கோரிக்கைவிடுத்துள்ளது. @btppubliceye என்ற டிவிட்டர் கணக்கில் ஷேர் செய்யலாம் அல்லது, 9480801000 என்ற வாட்ஸ்அப் எண்ணில் ஷேர் செய்யலாம்.