வழிபாட்டுத் தலங்களில் சுகாதாரமான பிரசாதம்... மாநில அரசுகளுக்கு உணவு பாதுகாப்பு ஆணையம் அட்வைஸ்!
வழிபாட்டுத் தலங்களில் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதங்கள் தரமானவையாக இருக்க வேண்டும் என்று உணவு பாதுகாப்பு ஆணையம் மாநில அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளது.
டெல்லி : நாடு முழுவதும் உள்ள வழிபாட்டுத் தலங்களில் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதங்கள் பாதுகாப்பான முறையில் தயாரிக்கப்பட்டு சுகாதாரமான முறையில் விநியோகம் செய்ய வேண்டும் என்று உணவு பாதுகாப்பு ஆணையம் மாநில அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளது. இதனையடுத்து மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் குஜராத் சோம்நாத் கோவில் அதிகாரிகள் உணவு பாதுகாப்பு ஆணையத்தின் சிறப்பு பயிற்சியில் பங்கெடுத்து விதிகளை தெரிந்து கொள்ள உள்ளனர்.
வழிபாட்டுத் தலங்களில் வழிபட வருவோருக்கு வழங்கப்படும் பிரசாதம் பாதுகாப்பானவை என்பதை உறுதிசெய்யும் கடமை அந்தந்த மாநில அரசுகளுக்கு இருப்பதாக உணவு பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. நாள்தோறும் நாடு முழுவதும் உள்ள வழிபாட்டு ஆலயங்களில் சுமார் 300 கோடி மக்கள் கடவுள் தரிசனம் செய்து செல்கின்றனர்.
இவர்களுக்கு வழிபாட்டுத் தலங்கள் சார்பில் அன்னதானமோ அல்லது பிரசாதமோ வழங்கப்படுகிறது. இவ்வாறு கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் அல்லது குருத்வாராக்களில் வழங்கப்படும் பிரசாதங்கள் இந்திய உணவு பாதுகாப்பு தர ஆணையத்தின் உரிமத்தை பெற்றிருக்க வேண்டும். அதே போன்று உணவு பாதுகாப்பு ஆணையத்தின் விதிகளையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கடந்த ஜனவரி 29ம் தேதி உணவு பாதுகாப்பு ஆணைய தலைமை செயல் இயக்குனர் அனைத்து மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களுக்கு அளித்துள்ள கடிதத்தில் பிரசாதங்களின் தரத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் உணவு பாதுகாப்பு ஆணையத்தின் பயிற்சியில் வழிபாட்டு தலங்களின் சார்பில் அதிகாரிகள் பங்கேற்று சுகாதாரமான முறையில் பிரசாத தயாரிப்பை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
இதன்படி மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் குஜராத்தில் உள்ள சோம்நாத் கோவிலைச் சேர்ந்தவர்கள் உணவு பாதுகாப்பு ஆணையத்தின் முதற்கட்ட பயிற்சியில் பங்கேற்க உள்ளனர்.