வாசன் கோஷ்டியை ஓரம் கட்டிட்டாங்களாமே காங்கிரஸில்.. பரபரப்பு தகவல்கள்!
டெல்லி: லோக்சபா தேர்தலில் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கொடுத்த பரிந்துரைகள் பலவற்றையும் கட்சி மேலிடம் ஓரம் கட்டி விட்டதாக பரபரப்பாக பேச்சு அடிபடுகிறது.
அவரது ஆதரவாளர்கள் பலருக்கும் சீட் மறுக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் வாசன் தரப்பு கடும் அதிருப்தியுடன் இருப்பதாகவும் கூறுகிறார்கள்.
ஜி.கே.வாசன் இந்த தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை, தமிழகம் முழுவதும் சுற்றி வந்து தீவிரப் பிரசாரம் செய்யப் போவதாக ஏற்கனவே அறிவித்துள்ளார். இந்த நிலையில் அவரது ஆதரவாளர்களுக்கு காங்கிரஸ் மேலிடம் ஆப்பு வைத்துள்ளதால் வாசன் தரப்பு டென்ஷனாகக் காணப்படுகிறதாம்.
தலைவர்கள் விலகல்.. தொண்டர்கள் முட்டல் மோதல்
இந்தத் தேர்தலில் வாசன், தங்கபாலு உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பலரும் போட்டியிட ஆர்வம் காட்டவில்லை. ஆனால் தங்களது ஆதரவாளர்களுக்கு சீட் வாங்க கடும் அடிதடியில் இறங்கியுள்ளனராம்.
கடுப்பாகிப் போன மேலிடம்
இப்படி தலைவர்கள் தாங்கள் ஒதுங்கிக் கொண்டு, தங்களது ஆதரவாளர்களுக்கு மட்டும் போட்டி போட்டுக் கொண்டு சீட் கேட்பதால் கட்சி மேலிடம் கடுப்பாகியுள்ளதாம்.
ஞானதேசிகன் பட்டியலில் ஏகப்பட்ட திருத்தம்
தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் ஜி.கே.வாசன் ஆதரவாளர். எனவே அவர் கொடுத்த வேட்பாளர் பட்டியலில் நிறைய வாசன் ஆதரவாளர்களே இருந்துள்ளனர். இதனால் மற்ற கோஷ்டித் தலைவர்கள் சண்டைக்கு வந்து விட்டனர். இதையடுத்து ஞானதேசிகன் பட்டியலை கட்சி மேலிடம் ஏற்கவில்லை. திருத்த உத்தரவிட்டது.
தங்கபாலு கோஷ்டிக்கு அடித்த லக்கி பிரைஸ்...
பலமுறை திருத்தப்பட்ட இந்தப் பட்டியலில் தற்போது தங்கபாலு கோஷ்டியினருக்கு அதிக சீட் கிடைப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் வாசன் அதிர்ச்சியில் உள்ளாராம்.
ஞானதேசிகனுக்கே அதிர்ச்சிதான்
எப்படி தனக்குத் தெரியாமல் தங்கபாலு கோஷ்டி உள்ளே புகுந்தது என்று தெரியாமல் ஞானதேசிகனே கூட ஆடிப் போயுள்ளாராம். இந்தப் பட்டியலுக்கு அவரே எதிர்ப்பு தெரிவித்துள்ளாராம்.
40 வயசுக்கு கீழே நிறைய
தற்போது வேட்பாளர் பட்டியலில் 40 வயதுக்குட்பட்டோருக்கு அதிக அளவில் சீட் கொடுக்க வேண்டும் என்று ராகுல் காந்தியும் கூறி விட்டாராம். இதனால் வேட்பாளர் தேர்வு மேலும் மேலும் சிக்கலாகியுள்ளதாக தெரிகிறது.
குலாம் நபியுடன் மோதிய ஞானதேசிகன்
இந்த நிலையில் கட்சியின் தமிழகப் பொறுப்பாளரான குலாம் நபி ஆசாத் வேட்பாளர் பட்டியலில் சில பெயர்களை சேர்த்து அதை ஏற்குமாறு ஞானதேசிகனிடம் கூற அவரோ முடியாது என்று குலாமுடன் மோதலுக்குப் போய் விட்டாராம்.
மொத்தத்தில் வாசனுக்கு ஆப்பு
மொத்தத்தில் வாசனுக்கு இந்த வேட்பாளர் தேர்வில் பெரும் ஆப்படித்து விட்டதாக கூறுகிறார்கள். இதனால் மறுபடியும் தமாகாவை தட்டி எடுத்து தமாஷ் காட்டலாமா என்று யோசித்து வருகிறதாம் வாசன் தரப்பு.. ஆனால் அதெல்லாம் இனி போணியாகாது என்று நலம் விரும்பிகள் வாசனை அமைதிப்படுத்தி வைத்து வருகிறார்களாம்.