ஜம்மு காஷ்மீரில் பாஜகவின் ஸ்கெட்ச் டமால்- குலாம்நபி ஆசாத் கட்சி கூடாரமே காலி!
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் மாஜி முதல்வர் குலாம் நபி ஆசாத்தை முன்வைத்து பாஜக போட்டிருந்த தேர்தல் வியூகத்துக்கு செம்ம அடி கிடைத்துள்ளது. குலாம் நபி ஆசாத் கட்சியில் இருந்து பெரும்பாலான தலைவர்கள் தாய்வீடான காங்கிரஸுக்கே திரும்பிவிட்டது பாஜகவுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப் பிரிவை மத்திய பாஜக அரசு ரத்து செய்தது; அதனைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்து கூறு போட்டது. இதனால் கடந்த 4 ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடைபெறாமல் இருக்கிறது.
ஜம்மு காஷ்மீர் தேர்தலை எதிர்கொள்ள பாஜக அல்லாத அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து களமிறங்க தயாராக இருக்கின்றன. இந்த கூட்டணி மீது கல்லெறிவதில் பாஜகவும் தீவிரமாக இருந்து வருகிறது. பாஜக தமக்கு தோதாக, மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத்தை தனி கட்சி தொடங்க வைத்தது.
குலாம் நபி ஆசாத் தனி கட்சி தொடங்கியதுதான் தாமதம்.. ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியினரும் அப்படியே குலாம் நபி ஆசாத் கட்சி பக்கம் தாவிவிட்டனர். இதனால் ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலமே கேள்விக்குறியாகிப் போனது. இந்த நிலையில் ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை ஜம்மு காஷ்மீர் காங்கிரஸிக்கு புத்துயிர் கொடுத்துவிட்டது.
ராகுல் காந்தியின் யாத்திரையில் ஜம்மு காஷ்மீர் முதுபெரும் தலைவர் பரூக் அப்துல்லா பங்கேற்றார். இதனால் பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கலாம் என்கிற நிலைமை உருவாகி உள்ளது. இந்த கூட்டணிக்கு ஜம்மு காஷ்மீரில் வெற்றி கிடைக்கும் என்பது ஆரூடம். இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஒரே நாளில் குலாம் நபி ஆசாத் கட்சியில் இருந்து பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்கள் தாய்வீடான காங்கிரஸுக்கே திரும்பிவிட்டனர்.
இது தொடர்பாக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகையில், குலாம் நபி ஆசாத்தின் ஒவ்வொரு நடவடிக்கையும் புரியாத ஒன்றாக இருக்கிறது. நாடாளுமன்றத்தில் 370-வது ரத்துக்கு எதிராக பேசினார்; பொதுமக்களிடம் அப்படித்தான் பேசினார்; ஆனால் திடீரென 370-வது பிரிவு ரத்து பற்றி எதுவுமே பேசாமல் இருக்கிறார். ஒருகட்டத்தில் 370-வது பிரிவு ரத்து நியாயம் என்பது போல சில கருத்துகளை முன்வைக்கிறார். இதனால் குலாம் நபி ஆசாத் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிவிட்டது என்கின்றனர். இதனால்தான் ஒட்டுமொத்தமாக காங்கிரஸ் கட்சிக்கே திரும்பிவிட்டோம் என்கின்றனர். அதாவது குலாம் நபி ஆசாத்தை களமிறக்கி காங்கிரஸை காலாவதியாக்கலாம் என கணக்குப் போட்டது பாஜக. இப்போது ஸ்கெட்ச் டமால் என சிதறிவிட்டது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.