வரிசையில் காத்திருக்க வைக்கப்பட்டதால் 9 வயது சிறுமி பலி... பாட்னா எய்ம்சில் கொடுமை
பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையில் வரிசையில் காத்திருக்க வைக்கப்பட்டதால் 9 வயது சிறுமி பலி ஆன சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாட்னா: பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த 9 வயது சிறுமிக்கு மருத்துவம் அளிக்காமல் வரிசையில் காத்திருக்க வைக்கப்பட்டுள்ளார். இதனால் அந்த சிறுமி வரிசையில் இருந்த இடத்திலேயே மரணம் அடைந்துள்ளார். சிகிச்சைக்கு வந்த சிறுமி பலி ஆன சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரவுஷன் குமாரி பீகாரின் 'லகிஷராய்' என்ற சிறிய கிராமத்தில் வசித்து வந்தார். இவருக்கு கடந்த ஒரு வாரமாக கொடூரமான காய்ச்சல் நிலவி வந்து இருக்கிறது. நாளுக்கு நாள் உடலில் வெப்பவும், காய்ச்சலும் அதிகரித்துக் கொண்டே இருந்திருக்கிறது.
இவருக்கு உள்ளூரில் கொடுக்கப்பட்ட மருத்துவம் எதுவும் பலன் அளிக்காததால் பாட்னாவில் இருக்கும் உயர்தர மருத்துவமனையான பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவருக்கு உடனடியாக மருத்துவம் பார்க்கப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டுள்ளது.
இது குறித்து அந்தப் பெண்ணின் தந்தை ராம்பாலாக் கூறியதாவது ''மருத்துவமனைக்கு இவளை மிகவும் மோசமான நிலையில்தான் கொண்டு வந்தோம். ஆனால் இங்கு இவர்கள் உடனியாக சிகிச்சைக்கு எடுத்துக் கொள்ளாமல் விண்ணப்ப படிவங்களைக் கொடுத்து நிரம்ப சொல்லிவிட்டனர். அந்த விண்ணப்ப படிவத்தை நிரப்பி அதை வரிசையில் நின்று கொடுப்பதற்குள் அதிக நேரம் ஆகிவிட்டது'' என்றார். சரியாக ராம்பாலாக் விண்ணப்ப படிவத்தை நிரம்பி வெளியே வரும் நொடியில் அவரது மகள் ரவுஷன் குமாரி மரணம் அடைந்து இருக்கிறார்.
இதுகுறித்து அந்த மருத்துவமனை நிர்வாகம் பேசிய போது "பொதுவாக அவசர சிகிச்சைக்கு வரும் நபர்களை உடனடியாக சிகிச்சைக்கு எடுத்துக் கொள்வோம். இந்த சம்பவம் எப்படி நடந்தது என்றே தெரியவில்லை. இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தப்படும்'' என்றனர். அந்த மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு தற்போது செயல்படாத நிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.