கோரக்பூரில் பாஜக தோல்வி.. முதல்வர் யோகி ஆதித்யநாத் கோட்டையில் சமாஜ்வாதி கொடி நாட்டியது!
Recommended Video

டெல்லி: ஆதித்யநாத் 5 முறை தொடர்ச்சியாக வெற்றி பெற்ற கோரக்பூர் தொகுதியில் பாஜக தோல்வியடைந்தது.
கோரக்பூர் லோக்சபா தொகுதி மற்றும், உத்தரபிரதேசத்தின் பூல்பூர் மற்றும் பீகாரின் அரேரியா ஆகிய 3 லோக்சபா தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 11ம் தேதி நடந்தன.
கோரக்பூர் லோக்சபா உறுப்பினராக இருந்த யோகி ஆதித்யநாத் உத்தரபிரதேச முதல்வராக பொறுப்பேற்றதாலும், பூல்பூர் தொகுதி உறுப்பினராக இருந்த கேசவ் பிரசாத் மவுரியா துணை முதல்வரானதாலும் இடைத் தேர்தல்கள் நடந்தன.

இடைத் தேர்தல்
இருவருமே உ.பி. மேலவை தேர்தலில் வெற்றி பெற்று தங்கள் பதவிகளில் தொடருகிறார்கள். எனவே இவர்கள் ராஜினாமா செய்ததால் காலியான இவ்விரு தொகுதிகளும் தேர்தலை சந்தித்தன.

மும்முனை போட்டி
இந்த 2 தொகுதிகளிலும் பாஜக, சமாஜ்வாதி, காங்கிரஸ் என மும்முனை போட்டி நிலவியது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, அரசியல் எதிராளியான சமாஜ்வாதிக்கு ஆதரவு அளித்தது. பாஜகவை தோற்கடிக்க இந்த உடன்படிக்கைக்கு வந்ததாக மாயாவதி கூறியிருந்தார். இருப்பினும் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டதால் சமாஜ்வாதி வாக்குகள் சிதறும், நாம் எளிதில் வெல்லலாம் என பாஜக நினைத்திருந்தது. ஆனால், நிலைமை தலைகீழாகிவிட்டது.

பாஜக தோல்வி
காலை 11.45 மணி நிலவரப்படி, கோரக்பூர் தொகுதியில், சமாஜ்வாதி வேட்பாளர் பிரவீன்குமார் நிஷாத் 1523 வாக்குகள் வித்தியாசத்தில், பாஜகவின் உபேந்திர தத் சுக்லாவைவிட முன்னிலை பெற்றிருந்தார். அதேபோல பூல்பூர் தொகுதியில், சமாஜ்வாதியின் நாகேந்திர பிரதாப் சிங், பாஜகவின் குஷ்லேந்திர சிங் பட்டேலைவிட 12,231 வாக்குகள் முன்னிலை பெற்றிருந்தார். அதேபோல அரேரியா தொகுதியில் ராஷ்டிரிய ஜனதாதள வேட்பாளர் சரபராஸ் ஆலம் முன்னிலை வகித்தார். பகல் 1.15 மணி நிலவரப்படி, சமாஜ்வாதி மேலும் அதிக முன்னிலை பெற்றது. 12வது ரவுண்டுகள் முடிவில், 14,688 வாக்குகள் முன்னிலை பெற்றார் பிரவீன்குமார் நிஷாத். அவர் மொத்தம் 1,80,155 வாக்குகளும், உபேந்திர தத் சுக்லா 1,65,487 வாக்குகளும் பெற்றிருந்தனர். எனவே பாஜ தோல்வி உறுதியானது. மாலை 6 மணியளவில் கோரக்பூரில் சமாஜ்வாதி வேட்பாளர் பிரவீன்குமார் நிஷாத் சுமார் 21,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிப்பு வெளியானது.

முதல்வர் தொகுதி
கோரக்பூர் தொகுதியில் 5 தேர்தல்களாக தொடர்ந்து வெற்றி பெற்ற யோகி ஆதித்யநாத்தான் தற்போது உ.பி முதல்வராக உள்ளார். கடந்த 3 தேர்தல்களிலும் அவர் 50 விழுக்காடுகளுக்கும் அதிகமாக வாக்கு வங்கியை வைத்திருந்த தொகுதி அது. இந்த நிலையில், அங்கே பாஜக தோல்வியடைந்துள்ளது. இது ஆதித்யநாத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், வரும் லோக்சபா பொதுத் தேர்தலுக்கான முன்னோட்டமாக இந்த தோல்வி பார்க்கப்படுவதால் பாஜக தலைமைக்கும் கிலி ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications