கிரீன்பீஸ் ஆர்வலரை ஏன் விமானத்தில் இருந்து இறக்கிவிட்டனர்?
டெல்லி: கிரீன்பீஸ் அமைப்பைச் சேர்ந்த ஆர்வலர் பிரியா பிள்ளையை தேடப்படும் நபராக அறிவித்து உளவுத் துறை கடந்த 9ம் தேதி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் தான் பிரியா லண்டன் செல்லும் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டார்.
தேடப்படும் நபர் ஏன்?
தேசிய பாதுகாப்பு கேள்விக் குறையாகும்போது, ஒரு நபருக்கு எதிராக தகவல் கிடைக்கும்போது அவரை உளவுத் துறை தேடப்படும் நபராக அறிவிக்கும். உளவுத் துறையால் தடை செய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் உள்ள கிரீன்பீஸ் தான் பிரியாவுக்கு விமான டிக்கெட் வாங்கிக் கொடுத்துள்ளது.
இந்தியாவில் மேற்கொள்ளப்படும் பல முக்கிய திட்டங்களை தடுத்து நிறுத்த கிரீன்பீஸ் அமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது என்று உளவுத்துறை கடந்த ஆண்டு அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் பணத்தை வைத்து இந்தியாவில் உள்ள கிரீன்பீஸ் ஆர்வலர்கள் போராட்டம் நடத்துவதாக உளவுத் துறை தெரிவித்துள்ளது.
I was offloaded,not allowed to leave the country : Priya Pillai,Green Peace activist pic.twitter.com/8sVF5TEJ2v
— ANI (@ANI_news) January 12, 2015
மஹான் நிலக்கரி சுரங்க விவகாரம்
மஹான் நிலக்கரி சுரங்க விவகாரம் பற்றியும் உளவுத் துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தை தடுத்து நிறுத்த கிரீன்பீஸ் அமைப்பினர் வெளிநாட்டு பணத்தில் போராட்டம் நடத்தினர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மஹான் நிலக்கரி சுரங்களில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் பற்றி இங்கிலாந்து எம்.பி.க்களுடன் பேச, கூட்டத்தில் உரை நிகழ்த்த பிரியா பிள்ளை லண்டன் கிளம்பினார்.
விதிமுறைகள் மாறிவிட்டது
ஒருவரை தேடப்படும் நபராக அறிவித்து சுற்றறிக்கை விட உளவுத் துறைக்கு அதிகாரம் உள்ளதா என்று விவாதிக்கப்பட்டது. அத்தகைய சுற்றறிக்கையை உள்துறை அமமைச்சகத்தின் ஒப்புதலோடு தான் வெளியிட வேண்டும் என்று கூறப்பட்டது. ஆனால் 2010ம் ஆண்டு விதிகள் மாற்றப்பட்டு அத்தகைய சுற்றறிக்கையை வெளியிட உளவுத் துறைக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. உளவுத் துறையில் கூடுதல் இயக்குனர் பதவிக்கு இணையான நபருக்கு தேடப்படும் சுற்றறிக்கை விட அதிகாரம் உள்ளது.
யாரையும் கைது செய்யும் அதிகாரம் உளவுத் துறைக்கு இல்லை. அது விமான நிலைய அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பினால் சம்பந்தப்பட்ட நபரை அவர்கள் விமானத்தில் இருந்து இறக்கிவிடுவார்கள். அதன் பிறகு அதிகாரிகள் தான் அந்த நபரை கைது செய்ய வேண்டும்.