ஜிஎஸ்டி விதித்தும் வரி வசூலாகவில்லை.. மத்திய அரசு அதிர்ச்சி
ஜிஎஸ்டி சேவை வரியின் மூலமாக கிடைக்கும் பணம் மாதத்திற்கு மாதம் குறைந்து வருவது மத்திய அரசை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
டெல்லி: ஜிஎஸ்டி கவுன்சில் நூற்றுக்கணக்கான பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளித்து வருவதால் மாதத்திற்கு மாதம் ஜிஎஸ்டி சேவை வரி வசூல் குறைந்து வருவதாக கருதப்படுகிறது.
ஜிஎஸ்டி வரி கடந்த ஜூன் மாதம் முதல் அமலுக்கு வந்தது. நாடு முழுவதும் ஒரே வரி என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்ட ஜிஎஸ்டியின் வசூல் ஆரம்பத்தில் உச்சத்திலிருந்த நிலையில் ஒவ்வொரு மாதமும் அது குறைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஜூலை மாதம் 94ஆயிரம் கோடியாக இருந்த வசூல், அடுத்த மாதம் 90ஆயிரம் கோடியாக குறைந்தது. இவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கடந்த நவம்பர் மாதத்திற்கான ஜிஎஸ்டி வரி வசூல் 80ஆயிரம் கோடியாக குறைந்து விட்டது. இது தற்போது மத்திய அரசை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
ஜிஎஸ்டிக்கு நாடு முழுவதும் பல வியாபாரிகள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், ஜிஎஸ்டி கவுன்சில் தொடர்ந்து ஆலோசனை கூட்டம் நடத்தி 200க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு வரியிலிருந்து விலக்களித்தது. இந்த முடிவு தான் ஜிஎஸ்டி வசூல் தொடர்ந்து சரிந்து வருவதற்கு காரணம் என்று கருதப்படுகிறது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பொருளாதார நிபுணர்கள் அடுத்தாண்டு ஜனவரி முதல், வரி வசூல் ஒழுங்குமுறையாக நடைபெறும் என்றும், அதன் பின் சீராக ஜிஎஸ்டி வரி வசூலின் அளவு இருக்கும் என தெரிவித்துள்ளனர்.