ஜிஎஸ்டி இழப்பீடு மசோதா: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல்
சரக்கு சேவை வரிக்கான இழப்பீட்டு மசோதாவை இக்கூட்டத் தொடரிலேயே மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ளது.
டெல்லி: ஜிஎஸ்டி இழப்பீடு மசோதாவை வரவிருக்கும் குளிர்கால கூட்டத் தொடரில் மத்திய அரசு தாக்கல் செய்ய இருக்கிறது. இந்த மசோதாவில் ஜிஎஸ்டி வரியால் மாநிலங்களுக்கு ஏற்படப் போகும் வரி இழப்பை மத்திய அரசு எவ்வாறு சரி செய்யப் போகிறது என்பது உட்பட பல்வேறு அம்சங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜிஎஸ்டி மசோதாவால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பீட்டு தொகையை மத்திய அரசு வழங்குவதற்கான சட்டப் பாதுகாப்பை ஜிஎஸ்டி இழப்பீடு மசோதா அளிக்கும். இந்த மசோதாவை மத்திய அரசு வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்ய இருக்கிறது.

முதல் ஐந்து வருடங்களில் வருவாய் வளர்ச்சி விகிதம் 14 சதவீதத்துக்கு குறைவாக இருப்பின் மத்திய அரசு மாநிலங்களுக்கு இழப்பீட்டு தொகையை வழங்கும்.
மத்திய அரசு அதிகாரிகள் வரைவு ஜிஎஸ்டி இழப்பீடு மசோதாவை நவம்பர் 15-ம் தேதிக்குள் இறுதி செய்து விடுவார்கள். பின்பு இது மாநிலங்களின் பார்வைக்கு அனுப்பப்படும். அதன்பின் நவம்பர் 24-25 ம் தேதியில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற இருக்கிறது.
இந்த கூட்டத்தில் இழப்பீடு மசோதா குறித்து விவாதிக்கப்படும். அண்மையில் நான்கு அடுக்கு ஜிஎஸ்டி வரி அமைப்பு முறைக்கு ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் வழங்கியது. முக்கியமான பொருட்களுக்கு குறைந்த வரியும், சொகுசு பொருட்களுக்கு அதிகபட்ச வரியும் விதிப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் உயர்ரக கார்கள், புகையிலை, பான் மசாலா. குளிர் பானங்கள் ஆகியவற்றிக்கு அதிகபட்ச வரியும் கூடுதலாக செஸ் வரியும் விதிக்கப்பட இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
சரக்கு சேவை வரி அமைப்பின் படி,பசுமை வரி மற்றும் சொகுசுப் பொருட்களுக்கான வரி விதிப்பு ஆகியவற்றின் மூலம் கிடைக்கும் 50,000 கோடி ரூபாய் வருவாயை மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு பயன்படுத்த உள்ளது.












Click it and Unblock the Notifications