மாற்றம், வெளிப்படைத் தன்மையின் முதல்படி ஜிஎஸ்டி - மோடி பெருமிதம்
டெல்லி: ஜி.எஸ்.டி. மசோதாவை உருவாக்கியதன் மூலம், வரி நடைமுறை எளிதாக்கப்பட்டுள்ளது. மாற்றம் வெளிப்படைத் தன்மையை நோக்கிய முதல்படி இது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நீண்ட இழுபறிக்கு பின்னர் திருத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி மசோதா (ஜிஎஸ்டி), சில திருத்தங்களுடன் இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது பேசிய பிரதமர் மோடி, இது எந்தவொரு தனிப்பட்ட கட்சிக்கும் கிடைத்த வெற்றியல்ல.
ஜனநாயக கோட்பாடுகளுக்கு கிடைத்த வெற்றி. அனைத்துக் கட்சிகளுக்கும் கிடைத்த வெற்றி. ஜி.எஸ்.டி. மசோதாவை உருவாக்கியதன் மூலம், வரி நடைமுறை எளிதாக்கப்பட்டுள்ளது. மாற்றம் வெளிப்படைத் தன்மையை நோக்கிய முதல்படி இது.
இந்த மசோதாவில் அனைத்து திருத்தங்களையும் மேற்கொள்வதற்கு அனைத்து முயற்சிகளும் நடந்தது. ஜி.எஸ்.டி. மசோதாவானது மாநிலங்களுக்கிடையிலான பரிவர்த்தனையை எளிதாக்கக்கூடியது. ஜி.எஸ்.டி. நிறைவேற்றப்பட்டால் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாநிலங்கள் கூடுதல் வருவாய் பெறும்.
ஜி.எஸ்.டி. விகாரத்தில் யாரும் அரசியலாக்காமல் நாட்டின் நலனுக்காக குரல் கொடுத்தனர். இது நிறைவேறும்போது மத்திய- மாநில அரசுகளின் உறவுகள் வலுப்பெறும்.
ஜி.எஸ்.டி. மசோதா தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருடன் ஆலோசனை நடத்தப்பட்டது. ஏழைகளின் பொருளாதாரம் மற்றும் கல்வியை மேம்படுத்துவதே எங்களது நோக்கம். அதற்கு ஜிஎஸ்டி வழிவகுக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.