குஜராத் முதல்வர் வேட்பாளர் யார்? பஞ்சாப் பார்முலாவை கையில் எடுத்த அரவிந்த் கெஜ்ரிவால்!
சூரத்: பஞ்சாப் பார்முலாவின் அடிப்படையில் குஜராத் சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை மக்கள் கருத்தை கேட்டு முடிவெடுப்போம் என ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநில சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலின் போதே குஜராத்துக்கும் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இமாச்சல பிரதேசத்துக்கு மட்டும் நவம்பர் 12-ல் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

குஜராத் தேர்தல் தேதி
குஜராத்தில் பிரதமர் மோடி மேலும் பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்க உள்ளார். பிரதமர் மோடியின் குஜராத் பயணம் முழுமையாக முடிவடைந்த பின்னரே குஜராத் தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்பது எதிர்பார்ப்பாகும்.

மும்முனைப் போட்டி
இதனிடையே குஜராத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் முழு வீச்சில் இறங்கி உள்ளன. குஜராத்தைப் பொறுத்தவரையில் ஆளும் பாஜக, காங்கிரஸுடன் ஆம் ஆத்மி மல்லுக்கட்டிக் கொண்டு இருக்கிறது. ஆனால் காங்கிரஸுக்கு செல்லக் கூடிய வாக்குகளை பிரித்து பாஜகவுக்கு வெல்லும் வாய்ப்பை ஆம் ஆத்மி அதிகரித்து தருகிறது என்பது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் குற்றம்சாட்டி வருகின்றன.

மக்கள் கையில் முதல்வர் வேட்பாளர்
இந்நிலையில் சூரத்தில் இன்று செய்தியாளர்களை ஆம் ஆத்மி கட்சித் தலைவரான டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்தார். அப்போது, ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை குஜராத் மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் தொடர்பான கருத்தை பொதுமக்கள் தெரிவிக்க தொலைபேசி எண், இ மெயில் ஐடி கொடுக்கப்பட்டுள்ளது. நவம்பர் 3-ந் தேதி மாலை 5 மணிவரை பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம். அதனடிப்படையில் நவம்பர் 4-ந் தேதி ஆம் ஆத்மி கட்சியின் குஜராத் தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்றார் கெஜ்ரிவால்.

அன்றைய பஞ்சாப் பார்முலா
பஞ்சாப் சட்டசபை தேர்தலின் போதும் இதே பார்முலாவை ஆம் ஆத்மி கட்சி கடைபிடித்தது. பொதுமக்களிடம் கருத்து கேட்ட பின்னர், பஞ்சாப் தேர்தலின் போது முதல்வர் வேட்பாளராக பகவந்த் மான் அறிவிக்கப்பட்டார். ஆம் ஆத்மி நடத்திய இந்த கருத்து கணிப்பில், சுமார் 21 லட்சம் பேர் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று பகவந்த் மான் முதல்வரானார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications