குஜராத் காங். கூட்டத்தில் சீறிய காளை! பதறி ஓடிய தொண்டர்கள்! அவிழ்த்துவிட்டு வேடிக்கை பார்த்த பாஜக?
காந்திநகர்: குஜராத் சட்டசபை தேர்தலில் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் காளை மாடு ஒன்று சீறிய நிலையில் புகுந்தது. இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் அலறியடித்து ஓடிய நிலையில் இதன் பின்னணியில் பாஜகவின் சதிச்செயல் உள்ளதாகவும், காளை மாட்டை அவிழ்த்து விட்டு வேடிக்கை பார்த்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
குஜராத்தில் முதற்கட்டமாக நாளை மறுநாள் 89 தொகுதிகளுக்கும், 2வது கட்டமாக 93 தொகுதிகளுக்கு 93 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இவ்வாறு 2 கட்டமாக மொத்தமுள்ள 182 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.
குஜராத்தில் ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம்ஆத்மி இடையே மும்முனை போட்டி உள்ளது. மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் பாஜக உள்ளது. டெல்லி, பஞ்சாப் வெற்றியை தொடர்ந்து ஆம்ஆத்மி கட்சி குஜராத்திலும் வேட்பாளர்களை அறிவித்து களப்பணியாற்றி வருகிறது.
அரசை விமர்சித்த எழுத்தாளருக்கும் 1.5 கோடி வீடு - பெருந்தன்மை காட்டிய முதலமைச்சர் ஸ்டாலின்
காங்கிரஸ் தீவிர பிரசாரம்
காங்கிரஸ் கட்சியை பொறுத்தமட்டில் எப்படியாவது குஜராத்தில் இருந்து பாஜகவை ஆட்சி கட்டிலில் இருந்து அகற்ற வேண்டும் என திட்டமிட்டு வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறது. கடந்த 27 ஆண்டுகளாக குஜராத்தில் பாஜகவிடம் ஆட்சியை இழந்துள்ள காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் முனைப்பில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சி சார்பில் அதன் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, எம்பி ராகுல் காந்தி, ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் உள்பட ஏராளமான தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.
பொதுக்கூட்டத்தில் புகுந்த காளை
இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து அசோக் கெலாட் மேக்சானாவில் பிரசாரம் செய்தார். அங்கு ஏற்பாடு செய்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசி வந்தார். மத்திய பாஜக மற்றும் மாநில பாஜக ஆட்சிகளை அவர் கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். இந்த வேளையில் பிரசார கூட்டத்துக்கு நடுவே காளை மாடு ஒன்று வேகமாக சீறிப்பாய்ந்து நுழைந்தது. இதனால் பயந்துபோன ஆண், பெண் தொண்டர்கள் தங்களின் சேர்களை தூக்கிக்கொண்டு ஓடினர். சிலர் அங்கிருந்த கம்பங்களில் ஏறினர். இதை பார்த்த காளை மாடு சிறிது நேரத்தில் அங்கிருந்து மீண்டும் வெளியே ஓடியது.
பாஜகவின் சதியா?
இந்நிலையில் தான் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் காளை மாடு புகுந்ததன் பின்னணியில் பாஜக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் காளை மாட்டை பாஜகவினர் அவிழ்த்து விட்டதாக அசோக் கெலாட் குற்றம்சாட்டினார். இதுபற்றி அந்த மேடையில் அசோக் கெலாட் பேசும்போது, ‛‛காங்கிரஸ் பொதுக்கூட்டத்துக்கு இடையூறு செய்ய பாஜகவினர் காளையை அனுப்பி உள்ளனர். தேர்தலுக்கு முன்பாக தொடர்ந்து பாஜகவினர் இதுபோன்ற தந்திரங்களை கையாண்டு வருகின்றனர். பாஜகவின் சதியுடன் கூடிய தந்திரங்கள் பலவற்றை நான் சந்தித்து இருக்கிறேன்'' என குற்றம்சாட்டினார்.
வெளியான வீடியோ
இதற்கிடையே காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் காளை புகுந்தது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியானது. இந்த வீடியோவில் அசோக் கெலாட் மேடையில் இருந்த நிலையில், ‛‛மக்கள் யாரும் பயப்பட வேண்டாம். காளை தானாகவே வெளியேறிவிடும்'' என அவர் கூறுவது கேட்கும் நிலையில், காளைக்கு பயந்து மக்கள் ஓடுவதும் பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.